உயர்ந்தது மதுபானம் விலை.. எவ்வளவு தெரியுமா? புதுச்சேரி அரசு அதிரடி

Puducherry Liquor Price hike : புதுச்சேரியில் மதுபானங்களில் வலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு 2025 மே 28ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், பிராந்தி, விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்களின் விலை லிட்டருக்கு ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.60 கோடி வரை புதுச்சேரி அரசு வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

உயர்ந்தது மதுபானம் விலை..  எவ்வளவு தெரியுமா? புதுச்சேரி அரசு அதிரடி

புதுச்சேரியில் மதுபானம் விலை உயர்வு

Updated On: 

29 May 2025 07:35 AM

புதுச்சேரி, மே 29 : புதுச்சேரியில் மதுபானங்களில் விலை (Pondicherry Liquor Price hike) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு 2025 மே 28ஆம் தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரி பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிமாகவே இருக்கும். குறிப்பாக, தமிழகத்தை விட புதுச்சேரியில் மதுபானங்களில் விலை குறைவாகவே இருக்கும். பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுபானம் வாங்க புதுச்சேரிக்கு மதுபிரியர்கள் வருகை தருவார்கள். அதற்கு ஏற்ப, புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மதுகடைகள் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசுக்கு முக்கிய வருவாயாக மதுபானம் இருந்து வருகிறது.

அதிரடியாக உயர்ந்த மதுபானம் விலை

இந்த நிலையில், மதுபானம் விலையை புதுச்சேரி அரசு உயர்த்தி உள்ளது. வருவாயை பெருக்க புதுச்சேரி அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுபானம் விலையை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. மேலும், மது வகைகளுக்கான கலால் வரி, உரிம கட்டணம், நில வழிகாட்டி மதிப்பை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு எடுத்தது. இந்த நிலையில், மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், புதுச்சேரி அரசு மதுபானம் விலையை உயர்த்தியுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கு பிறகு, மதுபானங்களுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, இத்தனை ஆண்டுகள் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

எவ்வளவு தெரியுமா?

இதன் மூலம், புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களில் விலை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு 2025 மே 28ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பிராந்தி, விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்களின் விலை லிட்டருக்கு ரூ.50 அதிகரித்து ரூ.325 ஆக உள்ளது. பீர் விலை ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சாதாரண குவாட்டர் ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. உயர ரக பாட்டில் ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கலால் வரி கட்டமைப்பின் மூலம், புதுச்சேரி அரசு 2025 நிதியாண்டில் ரூ.185 கோடி கூடுதல் வருவாயை எதிர்பார்க்கிறது. இருப்பினும், தமிழ்நாடு, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில், மதுபான விலைகள் புதுச்சேரியில் தொடர்ந்து குறைவாகவே இருக்கும்.

இதுகுறித்து அரசு அதிகாரி கூறுகையில், “மதுபானங்களுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டாலும், அண்டை மாநிலத்தை விட மதுபானங்களின் விலை குறைவாகவே இருக்கும்” என்றார். இந்த நடவடிக்கை மூலம் சுமார் ரூ.60 கோடி வரை புதுச்சேரி அரசு வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.