பாகிஸ்தானுக்காக உளவு.. டெல்லியில் சிஆர்பிஎஃப் வீரர் அதிரடி கைது!
CRPF வீரர் மோதி ராம் ஜாட் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 2023 முதல் ரகசிய தகவல்களை பகிர்ந்ததாகவும், பாகிஸ்தானிடம் இருந்து நிதி பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை வெளியிட்டதாக பலர் கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, மே 26: பாகிஸ்தானுக்காக (Pakistan) உளவு பார்த்த விவகாரத்தில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் சிஆர்பிஎஃப் வீரர் (CRPF) தேசிய புலனாய்வு அமைப்பால் (NIA) பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதி ராம் ஜாட் எனப்படும் அந்த நபர் பாகிஸ்தானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், 2023 முதல் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்பு குறித்த ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இதுதொடர்பான தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் பல்வேறு வழிகள் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் இருந்து நிதி பெற்றதையும் என்.ஐ.ஏ. கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை தேசிய புலனாய்வு அமைப்பு 2025, ஜூன் 6 ஆம் தேதி வரை தங்களுடைய விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை வழங்கியதாக 2025, மே 25 ஆம் தேதி குஜராத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர் கைது செய்யப்பட்ட நிலையில் இவ்விவகாரத்தில் அடுத்தடுத்து பல பேர் சிக்கி வருவதும், சிலரின் பெயர்கள் அடிபடுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
பின்னணி என்ன?
கடந்த 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகல்ஹாம் என்ற இடத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தாக்குதல் நடந்த சமயத்தில் பிரதமர் மோடி வெளிநாடு சென்றிருந்த நிலையில் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக நாடு திரும்பினார். தொடர்ந்து பாதுகாப்பு துறை, வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை ஆகியவற்றின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.




இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் இருந்த அத்தனை தொடர்புகளும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் 2025 மே 6ஆம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கு இடையே 3 நாட்களாக பெரும் போர்பதற்றம் நிலவிய நிலையில் 2025 மே 9ம் தேதி போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.
ஆனாலும் பாகிஸ்தான் உடனான வர்த்தக தடை தொடரும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கிடையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்தியாவில் அடுத்தடுத்து பல நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். யூடியூப் பெண் பிரபலம் ஜோதி மல்ஹோத்ரா தொடங்கி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 12 பேர் கடந்த 15 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் யாரெல்லாம் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துள்ளனர் என்பது தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.