ஜூன் 16 முதல் பைக் டாக்ஸிக்கு தடை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Bike Taxi Ban In Karnataka : கர்நாடகாவில் 2025 ஜூன் 16ஆம் தேதி முதல் பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்கப்படுகிறது. ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற அனைத்து வகையான பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், பைக் டாக்ஸி ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு, ஜூன் 14 : கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்ஸி (Bike Taxi) சேவைகளை நிறுத்தும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மாநில உயர் நீதிமன்றம் (Karnataka High Court) மறுத்துள்ளது. இதனால், ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற பைக் டாக்ஸி (Bike Taxi Ban Karnataka) ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர். எனவே, கர்நாடகாவில் 2025 ஜூன் 16ஆம் தேதி முதல் பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரூ உள்ளிட் பெரு நகரங்களில் ஓலா, ஊபர் போன்ற பைக் டாக்ஸி சேவைகள் இயங்கி வருகிறது. குறைவான கட்டணம் மற்றும் விரைவாக செல்வதால் வேலைக்கு செல்பவர்கள் பைக் டாக்ஸியில் பயணித்து வருகின்றனர். இது ஒருபக்கம் வரவேற்பை பெற்றாலும், பைக் டாக்ஸி சேவை தொடர்பாக புகார்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
கர்நாடகாவில் ஜூன் 16 முதல் பைக் டாக்ஸிக்கு தடை
எனவே, பைக் டாக்ஸி சேவையை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இப்படியான சூழலில், கர்நாடகாவில் 2025 ஜூன் 16ஆம் தேதி முதல் பைக் டாக்ஸி தடை செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவலின்படி, 2025 ஏப்ரல் 2ஆம் தேதி நீதிபித பி.ஷியாம் பிசாத் கர்நாடகாவில் பைக், டாக்ஸி சேவைகளை ஆறு வாரங்களுக்குள் நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதாவது, 2025 ஜூன் 15ஆம் தேதி வரை மட்டுமே பைக் டாக்ஸி சேவை இருக்கும் வேண்டும் எனவும் அதற்கு பிறகு பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்கப்படும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நிதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.




நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த வழக்கை நீதிபதிகள் வி. காமேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி ஸ்ரீனிவாஸ் ஹரிஷ் குமார் ஆகியோர் கொண்ட விசாரித்து வருகிறது. 2025 ஜூன் 13ஆம் தேதியான நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பைக் டாக்சிகளை இயக்குவதற்கு இடைக்கால அனுமதி வழங்க மறுத்துவிட்டது. மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சஷிகிரண் ஷெட்டி வாதிடுகையில், பைக் டாக்சிகளுக்கான அனுமதி விதிகளை வகுக்க அரசாங்கம் தயாராக இல்லை என கூறியது.
இதனை அடுத்து, உயர் நீதிமன்றம் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கர்நாடக அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரியச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை தடை தொடரும் என நீதிமன்றம் கூறியிருக்கிறது. மேலும், மேல்முறையீட்டு வழக்கை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.