24 மணி நேரத்திற்கு முன்னதாகவே வெளியாகும் பயணிகள் பட்டியல்.. ரயில்வே நிர்வாகம் சோதனை முயற்சி!
24 Hour Advance Notice for Confirmed Train Tickets | தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான உறுதி செய்யப்பட்ட பட்டியல் 4 மணி நேரத்திற்கு முன்னதாக வெளியிடப்படும் நிலையில், அது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே பட்டியல் வெளியாகும் சோதனை முயற்சியை இந்திய ரயில்வே கையில் எடுத்துள்ளது.

சென்னை, ஜூன் 12 : அதி விரைவு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலை ரயில்வே நிர்வாகம் 4 மணி நேரத்திற்கு முன்னதாக வெளியிட்டு வரும் நிலையில், அது குறித்து பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இனி அதி விரைவு ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் 24 மணி நேரத்திற்கு முன்னதாக வெளியாகும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இந்திய ரயில்வே (Indian Railways) கூறியுள்ளது. இந்த நிலையில், பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலை 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே வெளியிடுவது குறித்து வெளியான தகவல் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள்
இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்களின் பிரதான போக்குவரத்து சேவையாக உள்ளது ரயில்கள் தான். குறைந்த விலையில், மிக நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்பதால் பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு நாள்தோறும் ஏராளமான மக்கள் ரயில்களில் பயணம் செய்யும் நிலையில், அதில் சில சிக்கல்களும் உள்ளன. கூட்ட நெரிசல், முன்பதிவு செய்வதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி ரயில்வே துறையும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலை முன்கூட்டியே வெளியிடும் வகையில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.




சோதனை முயற்சியாக 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே பட்டியல்கள் வெளியாகும்
STORY | Railways begin trial to confirm tickets for waiting passengers 24 hours before departure
READ: https://t.co/us5lLg9WZy pic.twitter.com/lmCssw1jMj
— Press Trust of India (@PTI_News) June 11, 2025
தற்போதைய நிலவரத்தின் படி, அதி விரைவு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல், பயணத்தின் 4 மணி நேரத்திற்கு முன்னதாக வெளியிடப்படுகிறது. இந்த நிலையில், 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே பட்டியல்களை வெளியிடும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. இது குறித்து பிடிஐ செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பர இயக்குநர் திலீப் குமார், பிகானேர் பிரிவில் இந்த சோதனை முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அங்கு ரயில்கள் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே பட்டியல் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொருத்து மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.