ஏசிக்கு புதிய கட்டுப்பாடு.. இனி இந்த வரம்புக்குள் தான் பயன்படுத்த முடியும்..
AC Usage Rules: எரிசக்தி நெருக்கடியை கருத்தில் கொண்டு இனி தயாரிக்கப்படும் ஏசிக்கள் குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வரையில் மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும் என மத்திய மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய எரிசக்தி நெருக்கடியை எதிர்த்துப் போராடவும், நிலைத்தன்மை இலக்குகளை நோக்கி நகரவும், நாடு முழுவதும் உள்ள ஏர் கண்டிஷனர்களுக்கு வெப்பநிலை கட்டுப்பாடுகளை கட்டாயமாக்கும் கொள்கையை இந்திய அரசாங்கம் உருவாக்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து புதிய ஏர் கண்டிஷனர்கள் 20 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும்படி திட்டமிடப்படும். அதிகபட்ச வரம்பு என்பது 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஏர் கண்டிஷனை ஒரு டிகிரி செல்சியஸ் குறைப்பதன் மூலம் ஆறு சதவீத அதிக ஆற்றலை பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். எரிசக்தி பயன்பாடு, கார்பன் உமிழவு மற்றும் எரிசக்தி சுமையை கட்டுப்படுத்த குறிப்பாக கோடை காலங்களில் வெப்பநிலையை நிர்வகிப்பது ஒரு முக்கியமான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஏர் கண்டிஷனர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் என்ன?
ऊर्जा बचत की दिशा में Temperature standardization का एक नया प्रयोग किया जा रहा है। जिसके तहत AC का temperature न्यूनतम 20 डिग्री और अधिकतम 28 डिग्री तक सीमित रहेगा। pic.twitter.com/K7eIIYzs5S
— Manohar Lal (@mlkhattar) June 10, 2025
மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், வரும் காலத்தில் ஏர் கண்டிஷனர்களின் தேவையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தயாரிக்கப்படும் ஏர் கண்டிஷனர்கள் வரையறுக்கப்பட்ட வெப்பநிலை அமைப்புகளை கொண்டு தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏசி பயன்பாட்டாளர்கள் 28 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக அல்லது 20 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகர்வு ஒரு பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மட்டும் இல்லாமல் பல ஆண்டு காலமாக ஜப்பான் போன்ற நாடுகளில் கடைபிடிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளில் கோடை காலங்களில் மின்சார குறைப்புக்காக இதை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமெரிக்க எரிசக்தி துறை தனி நபர்கள் வீட்டில் இருக்கும் பொழுது வீட்டு தெர்மோஸாட்டுகள் 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் அவர்கள் வீட்டில் இல்லாத போது அதிகமாகவும் வைத்துக் கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் கூற்றுப்படி 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியா அதிகப்படியான குளிரூட்டும் ஆற்றலை பயன்படுத்தும் நாடாக மாறும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலங்களில் நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய 40% மின்சார சக்தியை ஏர் கண்டிஷனர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் இந்த திட்டம் நிறைவேறினால், நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் எரிசக்தி தேவைகளை சரிசெய்ய முயற்சிக்கும் பிற வளரும் நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியாகக் கூட இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.