லிவ் இன் உறவில் பிறந்த குழந்தைகளை புதைத்த ஜோடி.. எலும்புகளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்ததால் அதிர்ச்சி!
Kerala Couple Buries Two Newborn Babies | கேரள மாநிலம் திருச்சூரில் லின் இன் உறவில் இருந்த ஜோடி தங்களுக்கு பிறந்த குழந்தைகளை மண்ணில் புதைத்த நிலையில், குழந்தைகளின் எலும்புகளுடன் காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சூர், ஜூன் 30 : கேரளாவில் (Kerala) இரண்டு பச்சிளம் குழந்தைகளின் எலும்புகளுடன் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞர் ஒருவர், தானும் தனது லிவ் இன் பார்ட்னர் (Live in Partner) சேர்ந்து, தங்களுக்கு பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளை அவர்கள் பிறந்ததும் புதைத்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த இளைஞர் மற்றும் அவரது லிவ் இன் துணை ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பிறந்த குழந்தைகளை காதல் ஜோடி புதைத்தது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிறந்த பச்சிளம் குழந்தைகளை புதைத்த லிவ் இன் ஜோடி
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பவின் என்ற இளைஞர் தனக்கு பிறந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளின் எலும்புகளை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் தானும், 22 வயது ஆன லிவ் இன் பார்ட்னர் அனிஷாவும் சேர்ந்து தங்களுக்கு பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளை, பிறந்த உடனேயே புதைத்து விட்டதாக கூறியுள்ளார். காவல் நிலையத்திற்கு வந்த அவர், தன் கையில் வைத்திருந்த பையில் குழந்தைகளின் எலும்புகளை உடன் எடுத்து வந்துள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் அனிஷாவை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பேஸ்புக் மூலம் பழக்கமான இவர்கள் 2020 ஆம் ஆண்டு முதல் லிவ் இன் உறவில் இருந்து வந்துள்ளனர். பவின் பிளம்பராக பணியாற்றி வரும் நிலையில் அனிஷா லேப் டெக்னீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த ஜோடிக்கு 2021 ஆம் ஆண்டு வீட்டின் கழிவறையில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறக்கும் போது இறந்து விட்டதாக காவல் துறையிடம் கூறியுள்ள அனிஷா, அதனை தனது வீட்டின் அருகே புதைத்து விட்டதாக கூறியுள்ளார். அதை பவின் கேட்டதாகவும், அதனை வைத்து குழந்தைக்கு இறுதி சடங்கு செய்ய இருந்ததாகவும் கூறியுள்ளார்.




குழந்தைகளின் எலும்புகளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர்
அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு அனிஷாவுக்கு அவரது வீட்டில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் வெளியே கேட்காமல் இருக்க அவர்கள் குழந்தையின் வாயை இருக்கி மூடிய நிலையில், குழந்தை மூச்சு திணறி பலியாகியுள்ளது. அந்த குழந்தையின் உடலையும், அவர்கள் வீட்டின் அருகே புதைத்துள்ளனர். இந்த நிலையில், புதைக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புகளை தோண்டி எடுத்துக்கொண்டு வந்து பவின் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.