Lunar Eclipse: வானில் தோன்றிய இரத்த நிலா.. இந்தியா முழுவதும் கண்டு ரசித்த மக்கள்!
2025 செப்டம்பர் 7 அன்று நிகழ்ந்த முழு சந்திர கிரகணம் இந்தியா முழுவதும் உள்ள மக்களால் ஆர்வமுடன் கண்டுகளிக்கப்பட்டது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்தால் ஏற்படும் இந்த அரிய நிகழ்வு, சந்திரனை சிவப்பு நிறத்தில் காட்டியது. இரவு 9.57 மணிக்கு தொடங்கிய கிரகணம் அதிகாலை 2.25 மணிக்கு முழுமையாக நிறைவடைந்தது.

இந்தியா , செப்டம்பர் 8: நாடு முழுவதும் சந்திர கிரகணத்தை மக்கள் பார்த்து ரசித்தனர். 2025 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நேற்று (செப்டம்பர் 7) அன்று நிகழ்ந்தது. முழு சந்திர கிரகணமாக இருந்ததை ஆசியா முழுவதும் உள்ள மக்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை கண்டு களித்தனர். சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும் போது சூரியனில் இருந்து வரும் வெளிச்சம் மறைக்கப்படுவதால் பூமியில் நிழல் நிலவில் ஆக்கிரமிப்பு செய்வதே சந்திர கிரகணமாக அழைக்கப்படுகிறது. இது பகுதியாகவும், முழு சந்திர கிரகணமாகவும் நிகழும். ஏற்கனவே 2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இந்த ஆண்டில் மீண்டும் கிரகணம் நிகழ்ந்துள்ளது.
அவ்வாறு பூமியின் மொத்த நிழலும் சந்திரன் மீது விழும்போது அது சிவப்பு நிறமாக காட்சியளித்தது. இந்த அரியல் வானியல் நிகழ்வை மக்கள் பலரும் தூங்காமல் கண்டு மகிழ்ந்தனர். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி நகரும்போது, சூரிய ஒளி கதிர்கள் சந்திரனின் மேற்பரப்பை அடைவதைத் தடுக்கிறது. இதனால் சிவப்பு நிற வடிகட்டப்பட்ட கதிர்கள் மட்டுமே பூமியின் வளிமண்டலத்தின் வழியாக நுழைந்து சந்திரன் மீது படர்வதால் அது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
Also Read: இப்படியும் நடக்குமா? மூளைச்சாவு அடைந்த இளைஞர்.. இறுதிச் சடங்கில் நடந்த அதிசயம்!




முழு சந்திர கிரகணம்
அதன்படி சந்திர கிரகணம் சரியாக இரவு 9:57 மணிக்குத் தொடங்கியது. பின்னர் முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11:01 மணிக்கு ஆரம்பித்தது. சந்திரன் பூமியின் நிழலில் 82 நிமிடங்கள் முழுமையாகச் சூழப்பட்டிருந்தது. சூரிய கிரகணங்களைப் போல அல்லாமல், இந்த சந்திர கிரகணத்தை வெற்று கண்ணால் ரசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் தங்கள் வீட்டின் வாயில்களிலும் மாடியிலும் நின்று சந்திர கிரகணத்தை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
இவ்வளவு நீண்ட முழு சந்திர கிரகணத்தைக் காணும் வகையில் அறிவியல் மையங்கள், கோளரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நள்ளிரவு நேரத்தையும் கருதாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக வந்து கிரகணம் நிகழ்வதை தொலை நோக்கி வழியாக பார்த்து ரசித்தனர். இப்படியான ரத்த நிலவு கொண்ட முழு சந்திர கிரகணம் இனி 2028 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தான் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.
Also Read: பாடல் பாடிய பாதுகாவலர்.. கட்டி அணைத்தபடி மெய் மறந்து கேட்ட யானை.. வைரல் வீடியோ!
பலரும் சந்திர கிரகணம் நிகழ்வதை தங்களுடைய செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். சந்திர கிரகணம் நிகழ்ந்ததை முன்னிட்டு அனைத்து கோயில் நடைகளும் முன்கூட்டியே அடைக்கப்பட்டன. மேலும் கிரகணம் முடிந்த பின்னர் மக்கள் தங்களுடைய வீடுகளில் சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.