வயநாட்டில் பலத்த மழை.. மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்.. பீதியில் மக்கள்!
Wayanad Heavy Rains : கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், முண்டக்கை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளா, ஜூன் 25 : கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை (Wayanad Heavy Rains) தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், மீண்டும் நிலச்சரிவு (Wayanad Landslides) ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முண்டகை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. கேரளாவில் 2025 மே 24ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. கேரளா மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பாய்ச்சி அடிக்கிறது. குறிப்பாக, வயநாடு மாவட்டத்தில் உள்ள சூச்சிப்பாரா அருவியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் சேற்றுடன் கலங்கிய நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வயநாட்டில் பலத்த மழை
மேலும், பெய்லி பாலத்திற்கு கீழே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. முண்டக்கை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. முண்டகை வனப்பகுதியில் 100 மி.மீ வரை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரல்மலையிலும் கனமழை பெய்து வருகிறது.




இதனால், நிலச்சரிவு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் சந்தேகப்பகின்றனர். இருந்தாலும், நிலச்சரிவு ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தாலும், நிலச்சரிவு ஏற்படும் என்ற அச்சத்தில் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதுகுறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது.
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
Kerala: Heavy rains in Churalmala, Wayanad have caused a landslide. The river is rising. The Attamala road has been flooded due to the soil that was placed on both banks as part of the river renovation. pic.twitter.com/WsuZGrTK4n
— Pinky Rajpurohit 🇮🇳 (@Madrassan_Pinky) June 25, 2025
மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, முண்டக்கை, சூரள்மலை உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு துறையினர், மீப்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், வயநாடு உட்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாணசுரா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அருகிலுள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை மற்றும் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழாவிலும் லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வயநாட்டில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் தங்களது உடைமைகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.