ஏப்ரல் 15, 2026: அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட இருக்கின்றன. இந்த நோக்கில், அரசியலமைப்பு சட்டம் 131வது திருத்த மசோதா 2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டத் திருத்த மசோதா 2026 ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த மசோதாக்கள் நாளை, அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
தொகுதி மறுவரையறை என்றால் என்ன?
தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுபரிசீலனை செய்து மாற்றும் செயல்முறையாகும். இதன் முக்கிய நோக்கம், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்கள் எண்ணிக்கை சுமார் சமமாக இருக்கச் செய்வதாகும். இந்த செயல்முறை பொதுவாக மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க: நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..
இந்தியாவில் கடைசியாக முழுமையான தொகுதி மறுவரையறை 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. தற்போது, 2026க்கு பிறகு மீண்டும் மறுவரையறை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய எண்ணிக்கைகள்:
தமிழ்நாட்டில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், அது 49 ஆக உயர்ந்திருக்கும். ஆனால், அனைத்து மாநிலங்களுக்கும் சமவிகிதமாகவும் சுமார் 50% உயர்வாகவும் மத்திய அரசு (GOI) பரிந்துரைக்கும் முறையின் படி, அது 59 தொகுதிகளாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கேரளாவில் தற்போது 20 தொகுதிகள் உள்ளன. 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் அது 23 ஆக இருந்திருக்கும். ஆனால் புதிய முறையின் படி, 30 தொகுதிகளாக உயரும் என கணிக்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது 25 தொகுதிகள் உள்ளன. 2011 கணக்கெடுப்பின் படி 33 ஆக இருந்திருக்கும் நிலையில், புதிய முறையின் படி 37 ஆக அதிகரிக்கும்.
ஒடிஷாவில் தற்போது 21 தொகுதிகள் உள்ளன. 2011 அடிப்படையில் 28 ஆக இருந்திருக்கும் நிலையில், புதிய முறையில் 31 ஆக உயரும்.
தெலுங்கானாவில் தற்போது 17 தொகுதிகள் உள்ளன. 2011 கணக்கெடுப்பின் படி 24 ஆக இருந்திருக்கும் நிலையில், புதிய முறையில் 25 ஆக இருக்கும்.
கர்நாடகாவில் தற்போது 28 தொகுதிகள் உள்ளன. 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் 41 ஆக இருந்திருக்கும் நிலையில், புதிய முறையின் படி 42 ஆக உயரும்.