வீட்டில் சிலிண்டர் இல்லாமல் சமையல்.. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் சேமிப்பு.. கேரளாவில் விசித்திரமான நிகழ்வு… முழு தகவல் உள்ளே!
Kerala: கேரளம் மாநிலத்தில் குடிநீருக்காக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் கிடைக்காத நிலையில், அதிலிருந்து வெளியேறும் எரிவாயுவை பயன்படுத்தி ஒரு வீட்டில் சமையல் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சிலிண்டருக்கு செலவு செய்யப்படும் தொகை ரூ.10 ஆயிரம் சேமிப்பதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக நாடு முழுவதும் சிலிண்டர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், வணிக சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இந்த நிலையில் கேரளம் மாநிலம், ஆலப்புழாவில் உள்ள ஒரு பெண் தனது வீட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து நேரடியாக வரும் எரிவாயுவை பயன்படுத்தி சமையல் செய்து வருகிறார். ஆலப்புழா மாவட்டம், ஆரட்டுவழியை சேர்ந்த ரெத்னம்மாவும் அவரது குடும்பத்தினரும் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு தோண்ட முயன்றனர். ஆனால், ஆழமாக தோன்றிய பிறகு எதிர்பார்த்தபடி தூய்மையான குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதில், 75 அடி ஆழத்தை கடந்த பிறகும், கலங்கிய நிலையில் தண்ணீர் கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் கிணற்றை மூடுவதற்கு முடிவு செய்தனர்.
ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் எரிவாயு
இது தொடர்பாக அந்த குடும்பத்தின் உறுப்பினர் ரமேஷன் கூறுகையில், தூய்மையான தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆழ்துளை கிணறு தோண்டினோம். ஆனால், 75 அடிக்கு மேல் தோண்டப்பட்ட பிறகும் தூய்மையான தண்ணீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஆழ்துளை கிணறை மூடுவதற்கான பணிகளை மேற்கொண்டோம். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தீக்குச்சியை பெற்ற வைத்தார். அப்போது, கிணற்றின் வாயிலில் இருந்து தீப்பிழம்பு வெடித்து சிதறியது. இதனால், அங்கு கூடியிருந்த நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். பின்னர், ஆழ்துளை கிணற்றிலிருந்து ஒரு வித எரிவாயு வருவதை நாங்கள் உணர்ந்தோம்.
மேலும் படிக்க: இயற்கை எரிவாயு பெறும் வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு!




ஆழ்துளை கிணற்றில் இருந்து சமையல் அறைக்கு குழாய் இணைப்பு
அதன் அடிப்படையில், அந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து பைப் மூலம் சமையல் அறைக்கு ஒரு இணைப்பை கொடுத்தோம். இதன் மூலம், இலவசமாக எரிவாயு கிடைக்கப்பெற்று அடுப்புகளை பயன்படுத்தி வருகிறோம். இதில், முதலில் பிளாக் காபி தயாரித்தோம். அதில் ஒன்றும் விசேஷம் இல்லை, வாசனையும், சுவையிலும் வித்தியாசம் இல்லை. ஆரம்பத்தில், ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் எரிவாயுவால், எங்களது வீட்டுக்கும் கிராமத்துக்கும் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டு விடுமோ என்று அச்சமடைந்தோம். இதனால், நாங்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வந்தோம். மேலும், வீடுகளின் அருகில் வாளிகளில் தண்ணீர் எடுத்து வைத்திருந்தோம்.
ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் சேமிப்பு
ஆனால், அசாதாரணமான சம்பவம் எதுவும் நடக்கவில்லை. பின்னர், காலப்போக்கில் அதன் மீது இருந்த பயம் விலகியது. தற்போது, ஆழ்துளை கிணற்றிலிருந்து கிடைக்கும் எரிவாயு மூலம் எங்களது வீட்டில் அனைத்து விதமான உணவுகளையும் தயார் செய்து வருகிறோம். இதனால், வெளியில் இருந்து சிலிண்டர் வாங்குவது கிடையாது. இதன் காரணமாக ஆண்டுதோறும் சிலிண்டருக்காக செலவழிக்கப்படும் ரூ.10 ஆயிரம் சேமிக்கப்படுகிறது என்று அந்த வீட்டின் உரிமையாளர் ரமேஷன் கூறினார்.
மேலும் படிக்க: ஹோர்முஸ் வழியாக இந்தியாவுக்கு வர உள்ள மேலும் 20 கப்பல்கள்!