Karnataka : 2 வயது பெண் குழந்தைக்கு பேய் பிடித்ததாக கூறி மோசடி.. ரூ.28 லட்சம் வரை மோசடி செய்த போலி பெண் சாமியார்!
28 Lakh Rupees Fraud on Child | கர்நாடகாவில் 2 வயது பெண் குழந்தைக்கு பேய் பிடித்ததாக கூறி, பெண் சாமியார் ஒருவர் ரூ.28 லட்சம் பணம் பரித்த்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பெண் சாமியாரை தேடும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

பாகல்கோட், ஜூன் 18 : கர்நாடகாவில் (Karnataka) 2 வயது பெண் குழந்தைக்கு பேய் பிடித்ததாக கூறி பெண் சாமியார் ஒருவர் ரூ.28 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்றும் தீர்வு கிடைக்காததால் குழந்தையின் தாய் சாமியாரிடம் சென்ற நிலையில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், 2 வயது பெண் குழந்தைக்கு பேய் பிடித்ததாக கூறி, பெண் சாமியார் ரூ.28 லட்சம் பணத்தை ஏமாற்றியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2 வயது பெண் குழந்தைக்கு பேய் பிடித்ததாக கூறி ரூ.28 லட்சம் மோசடி
தந்தி செய்தியின் அடிப்படையில் ,கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி. தனியார் வங்கியில் பணியாற்றி வரும் இவருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தை கடை சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளது. குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் லட்சுமியின் தோழி ஒருவர் சீமா சாம்பவி என்ற பெண் சாமியாரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதனை தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசிக்கொண்டுள்ளனர்.
அப்போது அந்த சாமியார், உங்கள் குழந்தைக்கு பேய் பிடித்துள்ளது. அதற்கு சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று கூறியுள்ளார். இதற்கு லட்சுமி விருப்பம் தெரிவிக்கவே, பெண் சாமியாரின் வீட்டில் வைத்து குழந்தைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோவை லட்சுமிக்கு அனுப்பிய சாமியார், பணம் தருமாறு கோரியுள்ளார். அதன்படி, லட்சுமியும் சாமியாருக்கு ஆன்லைன் மூலம் ரூ.28 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனல் பூஜை நடத்திய பல நாட்களுக்கு பிறகும் குழந்தையின் உடல் நலத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த லட்சுமி, பெண் சாமியாரை தொடர்புக்கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த சாமியாரின் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில் தான், சீமா சாம்பவி என அழைக்கப்படும் அந்த பெண் போலி சாமியார் என்றும் அவர் தன்னிடம் ரூ.28 லட்சம் பணத்தை ஏமாற்றியதையும் லட்சுமி உணர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் போலி சாமியாரை தேடி வருகின்றனர்.