குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைப்பது எப்படி? அறிவியல் பூர்வமான 6 எளிய வழிகள்!
Kids Eat Vegetables: குழந்தைகளுக்கு ஐந்து வயதிற்கு முன்பாகவே பல்வேறு காய்கறிகளை அறிமுகப்படுத்துவதுடன், அவர்கள் அதிக பசியோடு இருக்கும் தருணங்களில் காய்கறிகளை முதலில் பரிமாறுவது நுகர்வை அதிகரிக்கும். உணவின் தட்டில் மற்ற சமையல் அளவைக் குறைத்து காய்கறிகளின் அளவை அதிகரிப்பதோடு, அவற்றை பொம்மைகள் போன்ற கவர்ச்சிகரமான வடிவங்களில் நறுக்கி வழங்குவது குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களில் ஒன்று, தங்களது குழந்தைகளுக்கு காய்கறிகளை ஊட்டுவதாகும். துரித உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் மீது குழந்தைகள் காட்டும் ஆர்வத்தை, சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மீது காட்டுவதில்லை என்ற கவலை பரவலாக எழுந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், குழந்தைகளை எளிதாக காய்கறிகள் சாப்பிட வைப்பதற்கான ஆறு எளிய மற்றும் அறிவியல் பூர்வமான வழிமுறைகளை ஊட்டச்சத்து நிபுணர்களும் உளவியலாளர்களும் இணைந்து பரிந்துரைத்துள்ளனர்.
ஆரம்ப காலத்திலேயே பழக்கப்படுத்துதல்
குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை மாற்றுவதில் அவர்களின் ஆரம்பகால வயது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான மரியன் ஹெதெரிங்டன் கருத்துப்படி, குழந்தைகளுக்கு ஐந்து வயதிற்கு முன்பாகவே பல்வேறு வகையான காய்கறிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துவது அவசியமாகும். முன் பருவக் கல்வி (Pre-school) வயதில் காய்கறிகளை அதிகம் சாப்பிட பழகாத குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் அதனைப் பழக்குவது மிகவும் கடினமாகிவிடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
பசியின் போது முதலில் காய்கறிகளை வழங்குதல்
குழந்தைகள் அதிக பசியோடு இருக்கும் தருணங்களை பெற்றோர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக உணவின் தொடக்கத்தில், அதாவது குழந்தைகள் மிகவும் பசியாக இருக்கும்போது காய்கறிகளை முதலில் பரிமாறுவது அவை தீர்ந்துபோவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக பேராசிரியை பார்பரா ரோல்ஸ் தெரிவிக்கிறார். இது குழந்தைகள் அளவுக்கு அதிகமாக வேறு உணவுகளை உண்பதைத் தடுப்பதுடன், காலை உணவிலேயே முட்டை பொரியலுடன் கீரை அல்லது காளான்களைச் சேர்த்து வழங்கும் புதிய பழக்கத்தையும் ஊக்குவிக்கிறது.
ஆரோக்கியமான உணவுகளின் அளவை அதிகரித்தல்
குழந்தைகளின் தட்டில் பரிமாறப்படும் உணவின் விகிதத்தை மாற்றுவது ஒரு சிறந்த உத்தியாகும். வழக்கமாக வைக்கும் இறைச்சி அல்லது இதர உணவுகளின் அளவைக் குறைத்து, காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவை ஐம்பது சதவீதம் வரை அதிகரித்தால், குழந்தைகள் த அறியாமலேயே அதிகளவில் காய்கறிகளை உட்கொள்வது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தட்டில் இருக்கும் உணவின் அளவைப் பொறுத்தே அவர்களின் நுகர்வுத் திறனும் மாறுபடுகிறது.
காய்கறிகளின் தோற்றத்தை கவர்ச்சிகரமாக மாற்றுதல்
உணவின் சுவையை விட அதன் காட்சி வடிவமைப்பு குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது. காய்கறிகளை சாதாரணமாக நறுக்கித் தராமல் பட்டாம்பூச்சி, பூக்கள் அல்லது பொம்மை கரடி போன்ற சுவாரசியமான வடிவங்களில் வெட்டி, தட்டில் அழகாக அலங்கரித்து வைக்கும் போது குழந்தைகள் அதை விரும்பி உண்கிறார்கள். இத்தகைய கலைநயமிக்க வடிவமைப்பு, புதிய மற்றும் ஆரோக்கியமான உணவுகளைப் பயமின்றி சுவைத்துப் பார்க்க அவர்களுக்கு உந்துதலை அளிக்கிறது.
Also Read: பிளாஸ்டிக்கிற்கு ‘குட்பை’ சொல்லுங்கள்… பசுமைக்கு ‘ஹாய்’ சொல்லுங்கள்!
குடும்பத்தினருடன் இணைந்து உண்ணும் பழக்கம்
பெற்றோரின் உணவுப் பழக்கவழக்கங்கள் குழந்தைகளிடம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நியூசிலாந்தில் பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் பெற்றோரின் குழந்தைகள் சாக்லேட், கேக் மற்றும் உப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகளை மிகக் குறைவாகவே சாப்பிடுவது தெரியவந்துள்ளது. குடும்பமாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து காய்கறிகளை ரசித்து உண்ணும்போது, குழந்தைகளும் தங்களை அறியாமலேயே அந்தப் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்குகிறார்கள்.
சுவைக்க வற்புறுத்தாமல் விளையாட்டாக அணுகுதல்
காய்கறிகளை சாப்பிட சொல்லி குழந்தைகளை வற்புறுத்துவது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக, உணவை ஒரு விளையாட்டாக மாற்றி பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைத் தொட்டுப் பார்க்கவும், மோப்பம் பிடிக்கவும், அதன் அமைப்பை ஆராயவும் அவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். உடனே சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதபோது, குழந்தைகளுக்கு அந்த உணவின் மீதான பயம் நீங்கி, பிற்காலத்தில் அவற்றை தாங்களாகவே முன்வந்து சுவைக்கத் தொடங்குகின்றனர்.