தவெக தனித்து போட்டி.. பெரம்பூரில் விஜய்.. டி.நகரில் ஆனந்த்? சென்னையில் களமிறங்கும் முதல் கட்ட தலைவர்கள்?
Tvk Candidates List : தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுவதுடன், கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியிலும், பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் போட்டியிடும் உத்தேச தொகுதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைய இருப்பதாகவும், அதற்கான முயற்சிகளை அந்த கூட்டணியின் தலைமை மேற்கொண்டு வருவதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் நேற்று திங்கட்கிழமை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் தனித்து தான் போட்டியிட போகிறோம். எனவே, தொகுதிகளுக்கு சென்று கட்சியினர் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்து இருந்தாராம். இந்த நிலையில், தவெகவில் ஏற்கெனவே 60 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுகிறாரா
மீதமுள்ள 174 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போல, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் டி. நகர் தொகுதிகளிலும், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும், கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் எழும்பூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: இந்தியா முழுவதும் 260 வந்தே பாரத் ரயில்கள்… படுக்கை வசதியுடன் தயாராகிறது… சென்னை ஐசிஎஃப் வைத்த இலக்கு!
3 கட்ட கருத்துக்கணிப்பில் கிடைத்த தகவலின்படி
இதே போல, அருள் பிரகாசம் சைதாப்பேட்டை தொகுதியிலும், வெங்கட்ராமன் மயிலாப்பூர் தொகுதியிலும், ஜெ. சி. டி. பிரபாகரன் ஆயிரம் விளக்கு தொகுதியிலும், மரிய வில்சன் ஆர். கே. நகர் தொகுதியிலும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தவெக சார்பில் 3 கட்ட கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மற்றும் அவரது பேச்சு எந்த அளவுக்கு மக்களை சென்றடைந்துள்ளது. விஜயின் பேச்சை மக்கள் எந்த அளவுக்கு உள்வாங்கியுள்ளனர் என்பது தொடர்பாகவும், கரூர் சம்பவம் மக்களை எந்த அளவுக்கு பாதிப்படைய செய்தது.
4- ஆவது கருத்துக்கணிப்பு மேற்கொள்ள திட்டம்
இந்தச் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டுமா அல்லது அவர் மீது தவறு இல்லை என்ற இல்லையா என்பது தொடர்பாகவும், மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் எந்த அளவுக்கு செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது எந்த அளவுக்கு அதிருப்தி உள்ளது என்பது தொடர்பாக 3 கட்ட கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு 4- ஆவது கருத்துக்கணிப்பு எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தற்போது வேட்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பாஜகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால்.. “எங்கள் கூட்டணி 220 இடங்களில் வெற்றி பெறும்”.. செல்வப்பெருந்தகை உறுதி