“விஜய் என் தம்பி.. அவருக்கு என் வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும் உண்டு”.. குஷ்பு நெகிழ்ச்சி!!
Tamilnadu Assembly Election: சுந்தர் சி ஒரு காரியத்தில் இறங்குகிறார் என்றால், அதில் தனது 100 சதவீத உழைப்பைத் தர முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் இறங்குவார். இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார் என்றால், அவரால் 200 சதவீதம் உழைத்து மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றார்.
Tamilnadu Polls 2026: குஷ்புவின் கணவரும் பிரபல இயக்குநருமான சுந்தர் சி, மதுரை மத்திய தொகுதியில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். அந்தவகையில், மதுரையில் இன்று காலை சுந்தர்.சி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் குஷ்புவும் பங்கேற்றிருந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகியான குஷ்புவிடம், சுந்தர்.சி மதுரையில் களமிறங்கியதற்கு எழுந்துள்ள விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிளித்த அவர், தேர்தல் பணிகளுக்காகச் சுந்தர் சி இனி மதுரையிலேயே வீடு எடுத்துத் தங்கி அங்கேயே பணிபுரியப் போகிறார். எனவே, அவர் விரைவில் ஒரு மதுரைக்காரராகவே மாறிவிடுவார் என்று குஷ்பு தெரிவித்தார்.
இதையும் படிக்க: ‘திராவிட மாடல்’ என்பது ஒரு ஏமாற்று வேலை.. தோல்வி பயத்தில் முதல்வர்.. டிடிவி தினரகன் சாடல்!!
மக்களின் இதயத்தில் இடம்:
குறிப்பாக, கனிமொழி எம்பி முன்வைத்த ‘வெளியூர்க்காரர்’ என்ற விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ளார். சுந்தர் சி கடந்த 30 ஆண்டுகளாகத் தனது திரைப்படங்கள் மற்றும் நகைச்சுவை மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் இதயத்திலும் இடம்பிடித்தவர். அவரை ‘வெளியூர்க்காரர்’ என்று வகைப்படுத்த முடியாது. மதுரை மக்கள் எப்போதுமே பாசக்காரர்கள், அவர்கள் சுந்தர் சி-க்கு அளித்து வரும் வரவேற்பு வியக்கத்தக்க வகையில் உள்ளது.
சுந்தர் சி ஒரு காரியத்தில் இறங்குகிறார் என்றால், அதில் தனது 100 சதவீத உழைப்பைத் தர முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் இறங்குவார். இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார் என்றால், அவரால் 200 சதவீதம் உழைத்து மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் களம் இறங்கியுள்ளார் என்று குஷ்பு உறுதிபடத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனம்:
தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய குஷ்பு, திமுக – காங்கிரஸ் கூட்டணியைக் கடுமையாகச் சாடினார். தமிழகத்தில் திமுக என்ற ஒரு வலுவான கட்சி இருப்பதால்தான் காங்கிரஸிற்கு ஓரளவாவது அரசியல் முகவரி இருக்கிறது என்றும், இல்லையென்றால் அவர்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது என்றும் விமர்சித்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கேள்விக்கு, அது கட்சி மேலிடம் எடுத்த முடிவு என்றும், அதற்குத் தன்னால் பதில் சொல்ல முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.
விஜய் என் தம்பி, அவருக்கு வாழ்த்துகள்:
தொடர்ந்து, விஜய் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜய் என் தம்பி; அவருக்கு எப்போதுமே எனது வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் உண்டு” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து, விஜய்யின் வேட்புமனுத் தாக்கல் மற்றும் அதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் சிறிய குளறுபடிகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, ஒரு பெரிய பயணத்தைத் தொடங்கும்போது இத்தகைய சிறிய தவறுகள் நடப்பது இயல்புதான் என்றும், அதையெல்லாம் அவரது குழுவினர் சரிசெய்துவிடுவார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிக்க: தேர்தலில் போட்டியிடாதது ஏன்.. மே 4ஆம் தேதி பின் தெரிவிக்கிறேன்- அண்ணாமலை பகீர் பேட்டி..
மேலும், விஜய்யின் அரசியல் வருகை எந்தக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து இப்போது கணிக்க முடியாது என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் உண்மை நிலை தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.