சட்டமன்ற தேர்தல்… புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 5 நாள்கள் தொடர் விடுமுறை!
Puducherry School Holidays: புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை 5 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், புதுவை மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு வருகிற ஏப்ரல் 7- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய மற்றும் முந்தைய நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக இந்த விடுமுறை ஏப்ரல் 6- ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் விடப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நாட்களில் சிபிஎஸ்சி தேர்வுகள் ஏதேனும் இருந்தால் அதற்கு எந்த விதமான விடுமுறையும் பொருந்தாது எனவும், அன்றைய தேதிகளில் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை 5 நாள்களாக உயர்வு
அதன்படி, புதுவை மாநிலத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் மிகச் சிறிய மாநிலமாக விளங்கி வருகிறது. அத்துடன், தேர்தல் பணிகளுக்காக பள்ளிகள் இடம் தேவைப்படும். அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பாக வைக்கப்படும்.
மேலும் படிக்க: “தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்”.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!




தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பள்ளிகள்
இதற்காக தேர்தலுக்கு முந்தைய நாட்களில் அந்தந்த பள்ளிகளில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பள்ளிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். இதன் பின்னர் வாக்குப்பதிவு நாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் வாக்களிக்க வருகை தருவார்கள். இதை தொடர்ந்து, மாலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்குகள் எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
வாக்குப்பதிவுக்கு முந்தைய- பிந்தைய தேர்தல் பணிகள்
இதற்காக, நகரப் பகுதியில் செயல்படும் அரசு பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும், அந்தந்த பள்ளிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரும்ப கொண்டு செல்லப்படும். இதன் காரணமாக, வாக்குப்பதிவுக்காகவும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அரசு பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… பள்ளி மாணவரின் வக்கிர செயல்… நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!