புதுச்சேரி தேர்தல்.. வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்?.. உச்சக்கட்ட பரபரப்பு!!
Puducherry Assembly Elections: தற்போது பாகூர் தொகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட டோக்கன்கள் குறித்துத் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தத் டோக்கன்களில் என்ன எழுதப்பட்டுள்ளது? அவை எந்தக் கடையைக் குறிக்கின்றன? அல்லது பணப் பரிமாற்றத்திற்கான குறியீடுகளா? என்பது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
Puducherry Polls 2026: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.9) நடைபெற்று வரும் நிலையில், பாகூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. புதுச்சேரி பாகூர் தொகுதியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரகசியமாக டோக்கன்களை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: புதுச்சேரி தேர்தல்.. வாக்களித்துவிட்டு பைக்கில் பறந்த முதல்வர் ரங்கசாமி.. வைரல் வீடியோ!!
பணம் மற்றும் மளிகைப் பொருட்கள்:
இந்தத் டோக்கன்கள் வாக்காளர்களுக்குப் பணம் அல்லது குறிப்பிட்ட கடைகளில் மளிகைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் ‘பரிசு டோக்கன்கள்’ என்று எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு டோக்கன் விநியோகிப்பவர்களை திமுக மற்றும் பிற எதிர்க்கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கையும் களவுமாகப் பிடிக்க முயன்றனர். அப்போது, பிடிபடுவோம் என்ற அச்சத்தில், டோக்கன்களை விநியோகித்த நபர்கள் கையில் இருந்த டோக்கன்களைச் சாலையிலேயே வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
போலீசாருடன் கடும் வாக்குவாதம்:
இந்தச் சம்பவம் குறித்த தகவல் பரவியதும், எதிர்க்கட்சியினர் சம்பவ இடத்தில் திரண்டனர். கையில் கிடைத்த டோக்கன்களை ஆதாரமாகக் காட்டி, அங்கிருந்த காவல்துறையினரிடம் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் ஆளும் கட்சியினருக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும், இத்தகைய வெளிப்படையான விதிமீறல்களைத் தடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
தேர்தல் ஆணையத்தின் விசாரணை:
தற்போது பாகூர் தொகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட டோக்கன்கள் குறித்துத் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தத் டோக்கன்களில் என்ன எழுதப்பட்டுள்ளது? அவை எந்தக் கடையைக் குறிக்கின்றன? அல்லது பணப் பரிமாற்றத்திற்கான குறியீடுகளா? என்பது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: புதுச்சேரி தேர்தல் 2026.. வாக்காளர்களுக்கு மலர் கொடுத்து, ‘வணக்கம்’ கூறி வரவேற்கும் ‘நிலா’ ரோபோ.. வாக்குச்சாவடியில் புதுமை!!
காரைக்காலில் வாக்குப்பதிவு நிறுத்தம்:
இதனிடையே, காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில், வாக்கு இயந்திரத்தில் திடீரென புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வி.வி.பேட் (VVPAT) இயந்திரத்தில் உள்ள பேட்டரியில் இருந்து புகை வந்ததைக் கண்ட அதிகாரிகள், பாதுகாப்பு கருதி சுமார் 10 நிமிடங்கள் வாக்குப்பதிவை நிறுத்தினர். பின்னர், பழுதான பேட்டரியை மாற்றிய பிறகு வாக்குப்பதிவு மீண்டும் சுமூகமாகத் தொடங்கியது.