புதுச்சேரி தேர்தல் 2026.. வாக்காளர்களுக்கு மலர் கொடுத்து, ‘வணக்கம்’ கூறி வரவேற்கும் ‘நிலா’ ரோபோ.. வாக்குச்சாவடியில் புதுமை!!
Puducherry Assembly Elections: வாக்குச் சாவடியில் நிலா ரோபோ நிற்பதைக் கண்ட பொதுமக்கள், குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். தொடர்ந்து, ரோபோவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பல வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தின் இந்த நவீன முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.
Puducherry Polls 2026: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.9) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கே மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வெயிலுக்கு முன்பாக வாக்களிக்க வாக்காளர்கள் ஆர்வம் காட்ட வருகின்றனர். இதனால், காலையிலேயே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வருகின்றனர். குறிப்பாக, இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளே செல்பவர்கள் செல்போன்களை வெளியில் ஒப்படைத்துவிட்டு, வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, வாக்காளர்கள் வாக்களித்தப் பின், மீண்டும் வந்து செல்போன்களை பெற்று செல்லலாம்.
இதனிடையே, இந்த தேர்தலில் வாக்காளர்களைக் கவரும் வகையிலும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் தேர்தல் ஆணையம் பல்வேறு நவீன ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ‘நிலா’ என்ற ரோபோ பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Puducherry Elections 2026 : புதுச்சேரியில் இன்று ஆட்சி அதிகாரத்துக்கான தேர்தல் போர்… கோட்டையில் கொடி நாட்டப்போவது யார்!
வாக்காளர்களை வரவேற்கும் ‘நிலா’:
#WATCH | Puducherry Elections 2026 | A robot, Nila welcomes voters arriving at VOC Govt School to exercise their franchise. https://t.co/0nisPCPdhr pic.twitter.com/HMZoKuQJnf
— ANI (@ANI) April 9, 2026
வாக்குச் சாவடிக்கு வரும் வாக்காளர்களை ‘நிலா’ ரோபோ இரு கைகளையும் கூப்பி ‘வணக்கம்’ கூறி இன்முகத்துடன் வரவேற்கிறது. தொடர்ந்து, வாக்காளர்களுக்கு அவர்களின் பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள இது உதவுகிறது. அதோடு, “ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்”, “தவறாமல் வாக்களியுங்கள்” போன்ற விழிப்புணர்வு வாசகங்களையும் இந்த ரோபோ பேசி வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, வாக்காளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் தயார் செய்யப்பட்டுள்ளது.
மக்களிடையே வரவேற்பு:
வாக்குச் சாவடியில் ரோபோ நிற்பதைக் கண்ட பொதுமக்கள், குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். ரோபோவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பல வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தின் இந்த நவீன முயற்சியைப் பாராட்டி வருகின்றனர். வ.உ.சி அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி வாக்குச்சாவடி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவியாக மாணவர் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், அவற்றைச் சேகரித்து வைக்கத் தனி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் நோக்கம்:
வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும், தேர்தல் நடைமுறையை மக்களுக்கு எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றவே இத்தகைய புதிய முயற்சியைக் கையாண்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ‘நிலா’ ரோபோவின் வருகை, புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.