மார்ச் 27, 2026: “நான் மற்றவர்களைப் போல அண்டா, குண்டா, மிக்ஸி போன்றவற்றை இலவசமாக வழங்கமாட்டேன். அவற்றை நீங்களே வாங்கிக் கொள்ளும் வகையில் வேலைவாய்ப்பையும், அதற்கான சம்பளத்தையும் வழங்குவேன்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிகள்:
நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்து தொடர்ந்து தனித்து களம் காணும் நிலையில், இந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுகிறது. இதற்காக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், வழக்கமாக இடம்பெறும் இலவச அறிவிப்புகள் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக சீமான் தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் சீமான் பரப்புரை:
அந்த வகையில், கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அவர், “வலிமைமிக்க ஆயுதம் வாக்கு. ஒற்றை வாக்கையே உலகம் திரும்பிப் பார்க்கும் வாக்காக மாற்ற முடியும். கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், பழனிச்சாமி ஆகியோரின் ஆட்சியை நீங்கள் பார்த்துவிட்டீர்கள். ஒரு முறை என்னிடம் ஆட்சியைத் தாருங்கள்.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. மீதமுள்ள 12 தொகுதிகள் எப்போது வெளியாகும்?
நல்ல கல்வி, உலகத் தரம் வாய்ந்த மருத்துவம், தூய குடிநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவேன். நான் ஆட்சிக்கு வந்த பிறகு மதுக்கடைகளை மூட முடியும். பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க முடியும். நீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் மலைகளையோ, ஆற்று மணலையோ உருவாக்க முடியாது; அது இயற்கையின் கொடை.
அண்டா, குண்டா, மிக்ஸியை இலவசமாக கொடுக்கமாட்டேன்:
மற்றவர்களைப் போல நான் அண்டா, குண்டா, மிக்ஸி போன்றவற்றை இலவசமாக வழங்கமாட்டேன். அவற்றை நீங்களே வாங்கிக் கொள்ளும் வகையில் வேலைவாய்ப்பையும், அதற்கான சம்பளத்தையும் வழங்குவேன். யாரையும் சார்ந்து இல்லாமல், தன்மானத்துடன் வாழக்கூடிய தற்சார்பு வாழ்க்கையை உங்களுக்கு அளிப்பேன்.
இன்று ஒரு தொகுதிக்கு 25 கோடி ரூபாய் செலவழித்து, ஒருவருக்கு 2,000 ரூபாய் கொடுப்பவர் தான் வேட்பாளர் ஆகிறார். 25 கோடி முதலீடு செய்பவர் லாபத்திற்காக செய்கிறாரா, மக்கள் சேவைக்காக செய்கிறாரா? உங்களுக்கு 1,000 ரூபாய் கொடுப்பவர் எப்படி சேவை செய்வார்? கொஞ்சம் சிந்தித்து வாக்களியுங்கள்” என தெரிவித்தார்.