ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு – ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமல்!
Banking Service Charges Hiked : எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் ஜூலை 1, 2025 முதல் ஏடிஎம் மற்றும் உடனடி பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளன. மாதத்திற்கான இலவச பரிவர்த்தனை வரம்பு முடிந்தவுடன், பணம் எடுப்பதற்கு ரூ.23 வரை கட்டணம் வசூலிக்கப்படும். உடனடி பரிவர்த்தனைகளுக்கான சேவைக்கான கட்டணங்களும் தொகை அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ (ICICI) வங்கி ஏடிஎம் மற்றும் உடனடியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்களை மாற்றியுள்ளது. நீங்கள் ஒரு வங்கி வாடிக்கையாளராக இருந்து, வேறொரு வங்கியின் ஏடிஎம்மைப் (ATM) பயன்படுத்தினால், சில பரிவர்த்தனைகளுக்குப் பிறகு கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் இந்த இரண்டு வங்கிகளின் சேவைகளைப் பயன்படுத்தினால் இந்த மாற்றங்கள் உங்களைப் பாதிக்கும்.
தனியார் வங்கிகளின் சில விதிகள் ஜூலை 1 முதல் மாற்றப்படவுள்ளது. குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் தொடர்பான சேவைக் கட்டணங்களை ஐசிஐசிஐ வங்கி மாற்றியுள்ளது. அதே நேரத்தில், எச்டிஎஃப்சி (HDFC) வங்கி அதன் கிரெடிட் கார்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றியுள்ளது. இந்த இரண்டு வங்கிகளின் சேவைகளை நீங்கள் பெறுகிறீர்கள் என்றால் இந்த மாற்றங்கள் உங்களைப் பாதிக்கும்.
ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் கட்டணங்களில் மாற்றம்
ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்களை மாற்றியுள்ளது. நீங்கள் ஒரு வங்கி வாடிக்கையாளராக இருந்து, ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம்மைப் பயன்படுத்தினால், சில பரிவர்த்தனைகளுக்குப் பிறகு கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.
அதன் படி பெருநகரங்களில் ஒவ்வொரு மாதமும் 3 பரிவர்த்தனைகள் இலவசமாகக் கிடைக்கும். பெருநகரங்கள் அல்லாத சிறிய நகரங்களில் ஒவ்வொரு மாதமும் 5 பரிவர்த்தனைகள் இலவசம். இதற்குப் பிறகு, நீங்கள் பணத்தை எடுத்தால் நிதி பரிவர்த்தனை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 23 செலுத்த வேண்டும். தற்போது 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 21 செலுத்த வேண்டியிருக்கிறது. உங்கள் பண இருப்பைச் சரிபார்த்தாலோ அல்லது கூடுதல் சேவைகளை பயன்படுத்தினாலோ, ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் வங்கி ரூ.8.5 வசூலிக்கும்




உடனடி பணப்பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணங்கள்
இப்போது, நீங்கள் உடனடி பணம் செலுத்தும் சேவை (IMPS) மூலம் ஏடிஎம் வாயிலாக பணம் அனுப்பும்போது, பரிவர்த்தனைத் தொகையின் அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக ரூ. 1000 பணம் அனுப்பினால் ரூ.2.50 செலுத்த வேண்டியிருக்கும் அதே போல 1000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 வசூலிக்கப்படும். அதே போல ரூ. 1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 5 வசூலிக்கப்படும். இந்த கட்டணங்கள் அனைத்தும் வரி செலுத்தப்படாது.
டெபிட் கார்டு கட்டணங்கள்
வழக்கமான டெபிட் கார்டுக்கான வருடாந்திர கட்டணம் ரூ. 300. கிராமப்புறங்களில் உள்ள பயனர்களுக்கு, ஆண்டு கட்டணம் ரூ.150 ஆகும். அதே போல கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, புதிய அட்டை பெற 300 ரூபாய் செலுத்த வேண்டும்.
எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம் கட்டணங்களில் மாற்றம்
எச்டிஎஃப்சி வங்கியின் ஏடிஎம்களில், வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் 5 முறைகள் இலவசமாக பணம் எடுக்கலாம். இதற்கு மேல் பணம் எடுத்தால், கட்டணம் வசூலிக்கப்படும். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும் போது, பெருநகரங்களில் மாதம் 3 முறை மட்டுமே இலவச பரிவர்த்தனைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். அதே போல பிற நகரங்கள் மற்றும் கிராமபுறங்களில் 5 முறை மட்டுமே இலவச பணப்பரிவர்த்தனைகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.
கட்டணம் எவ்வளவு?
இலவச பணப்பரிவர்த்தனைகளுக்கு பிறகு பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனை ரூ. 23 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மேலும் இதர சேவைகளுக்கு ரூ.8.50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
உடனடி பண பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணங்கள்
ஏடிஎம்களில் ரூ.1000 வரை மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் வரை ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ரூ. 15 கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு அனைத்து ஜிஎஸ்டியும் பெறப்படும். .