பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைக்கிறீர்களா? அதிக லாபம் தரக்கூடிய தபால்துறை சேமிப்பு திட்டங்கள்
Post Office Investment Plans : இப்போது பங்கு சந்தை போன்ற முதலீடுகளில் நிலையற்றத்தன்மை அதிகரித்திருக்கிறது. இதனால் பலர் மீண்டும் பழைய சேமிப்பு முறைகளுக்கு திரும்பி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய தபால்துறை வழங்கும் சேமிப்பு திட்டங்கள் மீண்டும் மக்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளன. இந்த கட்டுரையில் தபால்துறை சேமிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பணவீக்கம் மற்றும் சந்தை அடிப்படையிலான வருமானங்களில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், எளிய மக்கள் முதலீடு செய்வதற்கு நம்பிக்கைக்குரிய இடமாக தபால்துறை சேமிப்பு திட்டங்கள் மாறி வருகின்றன. இந்தியாவில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை இந்த தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான முதலீடாக மாறியுள்ளன. அரசின் முழுமையான ஆதரவு, நிலையான வட்டி வருவாய், மற்றும் எளிமையாக அணுக கூடிய தன்மையால் இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்திய தபால்துறை, சேமிப்புத் திடங்கள் தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. வரிவிலக்கு, நிலையான வட்டி, மற்றும் குறைந்த ஆபத்து ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது. இந்த கட்டுரையில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கல் குறித்து பார்க்கலாம்.
தபால்துறை சேமிப்பு கணக்கு
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 500 முதல் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 4 சதவிகிதம் வட்டி விகிதம் கிடைக்கிறது. வங்கிக் கணக்கைப் போலவே இயங்கும் இது, குறைந்த வட்டி ஆபத்துடன் கூடிய பாதுகாப்பான சேமிப்பு விருப்பமாக இருக்கிறது. ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே கணக்கு துவங்க அனுமதிக்கப்படுகிறது. தொடர்ந்து மூன்று வருடங்கள் நாம் பணம் செலுத்தவில்லை என்றால் கணக்கு ரத்து செய்யப்படும். மேலும் உரிய ஆவணங்களை செலுத்தி கணக்கை புதுப்பித்துக்கொள்ளலாம்.
ரெக்கரிங் டெபாசிட் (Recurring Deposit – RD)
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 6.7 சதவிகிதம் வட்டி கிடைக்கும். குறைந்தபட்சமாக மாதம் ரூ.100 வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். நாம் மாதம் செலுத்த வேண்டிய தொகையை நமது வருமானத்தை வைத்து முடிவு செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 6.7 சதவிகிதம் வட்டி கிடைக்கும். மாத வருமானத்தை நம்பியிருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற மாதந்தோறும் சேமிக்க உதவும் திட்டமாகும். திட்டத்தில் இணைந்து 1 வருடம் ஆன பிறகு கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 50 சதவிகிதம் வரை பெற்றுக்கொள்ளலாம். திட்டத்தில் இணைந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கணக்கை முடித்து மொத்த தொகையையும் எடுத்துக்கொள்ளலாம்.




டைம் டெபாசிட் (Time Deposit )
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு திட்டத்தின் கால அளவுக்கு ஏற்ப 6.9 சதவிகிதம் முதல் 7.5 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கும். மேலும் 5 ஆண்டு திட்டத்தில் இணைந்தால் பிரிவு 80சி-ன் கீழ் வரிவிலக்கு கிடைக்கும். நமது விருப்பத்துக்கு ஏற்ப 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என நான்கு விதமாக முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் வங்கிகளுக்கு இணையான வட்டி கிடைக்கிறது. மேலும் 6 மாதங்களுக்கு பிறகு தேவைப்பட்டால் குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு வட்டி பிடித்தம் செய்யப்படும்.
மாத வருமானத் திட்டம் (Monthly Income Scheme)
ஓய்வூதியதாரர்கள் மற்றும் நிலையான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 சதவிகிதம் வட்டி கிடைக்கும். தனி நபர் அதிகபட்சம் ரூ.9 லட்சமும் கூட்டுக்கணக்கு வைத்திருக்க விரும்புபவர்கள் அதிக பட்சமாக ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம்.
சுகன்யா சம்ருத்தி யோஜனை (Sukanya Samriddhi Yojana)
பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்காக திட்டமிடும் மக்களுக்கு ஏற்றது. தாய் அல்லது தந்தையால் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்காக தொடங்கலாம். இந்த திட்டத்தில் முதலீடு, வட்டி மற்றும் முதிர்ச்சி தொகை ஆகியவை அனைத்தும் வரிவிலக்கு கிடைக்கும். ஆண்டுக்கு 8.2 சதவிகிதம் வட்டி கிடைக்கும் . இந்த திட்டத்தில் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் காலம் 21 ஆண்டுகள் என குறிப்பிடப்படுகிறது.
பப்ளிக் புராவிடென்ட் ஃபண்ட் (Public Provident Fund)
நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது சிறந்த தேர்வு. முதலீடு, வட்டி, மற்றும் முதிர்ச்சி தொகை ஆகியவை அனைத்துக்கும் வரிவிலக்கு கிடைக்கும். தேவைப்படும் நேரத்தில் குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ள திட்டம் அனுமதிக்கிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.