இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம்.. டிரம்ப் அறிவிப்பு!
War Ceasefire Between Israel and Lebanon for Ten Days | ஈரான் போரால் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் டிசி, ஏப்ரல் 17 : இஸ்ரேல் (Israel) மற்றும் லெபனான் (Lebanon) இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவாக லெபனான் களமிறங்கிய நிலையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே தொடர் மோதல்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் தான், டிரம்ப் இந்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இஸ்ரேல் – லெபனான் இடையே நீடித்து வந்த போர்
அணு ஆயுதங்கள் தயாரிப்பதை கைவிட கோரி ஈரானை அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வந்தது. ஆனால், ஈரான் அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கிடையே ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய லெபனான், இஸ்ரேலை தாக்கியது.
இதையும் படிங்க : உலக புகழ் பெற்ற சுற்றுலா தளத்தில் சோகம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!
அதற்கு இஸ்ரேல், பதிலடி தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்தன. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நடைபெற்று வரும் தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேலிடம் போர் நிறுத்த உடன்பாடு மேற்கொள்ள வேண்டும் என்று லெபனான் கோரி வந்தது.
இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம்
இது குறித்து கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தினேன். பெரிய அளவில் தீர்வு ஒன்று ஏற்படுவதற்கான நடவடிக்கையாக இரு தலைவர்களும் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளனர். தீவிர ராஜ தந்திர முயற்சிகளின் விளைவாக இது ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது என்று கூறியுள்ளார்.