பாகிஸ்தானில் ஒரு மினி தமிழ்நாடு… நூற்றாண்டுகளாக தொடரும் தமிழ் கலாசாரம்!
Mini Tamil Nadu : பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், தமிழ்நாட்டை நினைவூட்டும் ஒரு சிறிய பகுதி இருப்பது தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மதராசி பாரா என்று அழைக்கப்படும் அந்த பகுதி, தமிழக கலாசாரத்தை இன்னும் பாதுகாத்து வரும் இடமாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், தமிழ்நாட்டை நினைவூட்டும் ஒரு சிறிய பகுதி இருப்பது தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மதராசி பாரா என்று அழைக்கப்படும் அந்த பகுதி, தமிழக கலாசாரத்தை இன்னும் பாதுகாத்து வரும் இடமாக பார்க்கப்படுகிறது. அங்குள்ள வீடுகளின் வாசலில் தமிழ் மரபுப்படி கோலங்கள் போடப்படுகின்றன. மேலும் டிபனுக்கு இட்லி, தோசை, அதிகாலை நேரங்களில் கோயில் மணி ஓசை என, தமிழ்நாட்டின் ஒரு பகுதியைப் போலவே அந்த இடம் காணப்படுகிறது. இந்த கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
100 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பயணம்
கராச்சியில் வாழும் தமிழ் சமூகத்தின் வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. கடந்த 1900 ஆண்டுகளின் ஆரம்ப கட்டத்தில், அதாவது சுதந்திரத்திற்கு முன் குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் ஆரம்பித்தது. அப்போது மெட்ராஸ் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்ட தமிழ்நாட்டிலிருந்து பலர் வேலை வாய்ப்பிற்காக கராச்சி நகருக்கு சென்றனர். ரயில்வே, துறைமுகம், மாநகராட்சி வேலைகள் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் பணியாற்ற தொடங்கினர். பின்னர் இலங்கையிலிருந்தும் சில தமிழ் குடும்பங்கள் கராச்சியில் குடியேறியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : நடுக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல்.. உதவி என கேட்டதும் ஓடி வந்த பாகிஸ்தான் கடற்படை!




இந்த நிலையில் 1947 இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, பல குடும்பங்கள் இந்தியாவுக்கு திரும்பாமல் கராச்சியிலேயே தங்கி விட்டன. தற்போது வரை பாகிஸ்தானில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலானோர் கராச்சியின் மதராஸி பரா, கொரங்கி மற்றும் திரிக் சாலை பகுதிகளில் வசிக்கின்றனர். குறிப்பாக மதராஸி பரா பகுதியில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்களாக உள்ளனர்.
தமிழர்களின் அடையாளமாக மாறிய மாரியம்மன் கோவில்
பாகிஸ்தானில் குஜராத்தி மற்றும் சிந்தி சமூகங்களை விட தமிழர்கள் மிகச் சிறிய சிறுபான்மை சமூகமாக உள்ளனர். இருப்பினும் அவர்கள் தமிழ் கலாசாரத்தை விட்டுவிடாமல் தொடர்கின்றனர். மேலும் அங்குள்ள மக்கள் இன்னும் தமிழ் உணவுகளையே அதிகம் உண்கின்றனர். குறிப்பாக இட்லி, தோசை, சாம்பார், சாதம் , ரசம் என அவர்கள் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் தமிழ் கலாச்சாரத்தை சார்ந்ததாக இருக்கிறது. மேலும் திருவிழாக்களின் போது வாழையில் சாப்பிடும் பழக்கம் இன்னும் அங்கு தொடர்ந்து வருகிறது.
இங்கு வசிக்கும் தமிழ் சமூகத்தின் முக்கிய அடையாளமாக கடந்த 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. திருவிழாக்கள் நடைபெறும்போது, ஆண்கள் மற்றும் பெண்கள் வேட்டி சேலைகள் அணிந்து பாரம்பரிய முறையில் கொண்டாடுகின்றனர். காலப்போக்கில் அங்குள்ள இளைய தலைமுறையினர் உருது மற்றும் ஆங்கிலம் அதிகம் பேசத் தொடங்கினாலும், உணவு, வழிபாடு மற்றும் பழக்கவழக்கங்களின் மூலம் தமிழ் கலாச்சாரம் அங்கு உயிருடன் இருக்கிறது.
இதையும் படிக்க : தென் கொரியாவில் நடத்தப்பட்ட தூக்க போட்டி.. 80 வயது முதியர் வெற்றி!
வேகமாக வளர்ந்து வரும் கராச்சியின் நடுவே, அமைதியாக தனது அடையாளத்தை பாதுகாத்து வரும் இந்த தமிழ் சமூகத்தை பலரும் பாகிஸ்தானின் மினி தமிழ்நாடு என்று அழைத்து வருகின்றனர். எல்லைகளை தாண்டியும், தலைமுறைகளை கடந்தும் தமிழ் கலாசாரம் தொடர்ந்து வாழ்ந்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.