“4,000 கி.மீ தூரம்.. இந்திய பெருங்கடலில் யுத்தம்.. உலகையே அதிரவைத்த ஈரானின் ‘மெகா’ ஏவுகணைத் தாக்குதல் முயற்சி..
Iran's 4,000-Km Strike: டியாகோ கார்சியாவைத் (Diego Garcia) தாக்க முயன்றதன் மூலம், ஈரான் தனது போர்க்களத்தை மத்திய கிழக்கிலிருந்து இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு மாற்றியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் எந்தவொரு பாதுகாப்பான இடமும் தங்களுக்கு எட்டாத தொலைவில் இல்லை என்ற எச்சரிக்கையை ஈரான் விடுத்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவத் தளமான ‘டியாகோ கார்சியா’ (Diego Garcia) மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்த முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த தாக்குதல் முயற்சி, போரின் போக்கை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. ஊடகங்கள் அளித்துள்ள தகவல்படி, ஈரான் 2 ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் முயற்சியை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் ஒரு ஏவுகணை தோல்வியடைந்திருக்கலாம், மற்றொன்று இடைமறித்து அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: கத்தாரின் LNG மீது ஈரான் தாக்குதல்.. எரிவாயு உற்பத்தி முடக்கம்.. உலக நாடுகளுக்குப் பேரிடி!
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை:
ஈரான் தனது எல்லையிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (Ballistic Missile) இந்தப் போரில் பயன்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பி-52 (B-52) ரக போர் விமானங்கள் மற்றும் அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘டியாகோ கார்சியா’ தளத்தைத் தகர்ப்பதே ஈரானின் திட்டமாக இருந்துள்ளது. அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் (Missile Defense Systems) இந்தத் தாக்குதலை முறியடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இவ்வளவு தொலைவில் உள்ள ஒரு தளத்தை ஈரான் குறிவைத்திருப்பது அமெரிக்க ராணுவ வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




மறைக்கப்பட்ட ரகசியத் திறன்கள்:
இந்தத் தாக்குதல் முயற்சி உலக நாடுகளின் ‘பாதுகாப்பு வரைபடத்தை’ (Risk Map) மாற்றி அமைத்துள்ளது. டியாகோ கார்சியா தளம் ஈரானில் இருந்து சுமார் 4,000 கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால், ஈரான் தனது ஏவுகணைகளின் எல்லை 2,000 கி.மீ வரை மட்டுமே என்று பகிரங்கமாக அறிவித்திருந்தது. தற்போது அந்தத் தடையைத் தாண்டி இருமடங்கு தொலைவில் உள்ள இலக்கைத் தாக்க முயன்றதன் மூலம், உலகிற்குத் தெரியாத பல ரகசியத் திறன்களை ஈரான் மறைத்து வைத்திருப்பது உறுதியாகியுள்ளது. அதோடு, சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் “ஈரான் இன்னும் என்னென்ன ரகசிய ஆயுதங்களை வைத்திருக்கிறது?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீண்ட தூர ஏவுகணைகள்:
இதுவரை ஈரானிடம் 2,000 முதல் 2,500 கி.மீ வரை பாயும் ஏவுகணைகளே இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் 4,000 கி.மீ இலக்கைத் தொடும் முயற்சி, ஈரானின் ராணுவத் தொழில்நுட்பம் ஐரோப்பாவின் பெரும்பகுதியைத் தாக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது. இந்த ஏவுகணைகளை ஈரான் சொந்தமாகத் தயாரித்ததா அல்லது பிற நாடுகளின் உதவியுடன் உருவாக்கியதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஈரானுக்கு அரசியல் ரீதியாக வெற்றி:
இந்தத் தாக்குதலில் இலக்கு சரியாகத் தாக்கப்பட்டதா இல்லையா என்பது முக்கியமல்ல. மாறாக, டியாகோ கார்சியா தளம் ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் வந்துவிட்டது என்பதைக் காட்டியதே ஈரானின் அரசியல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. தாக்குதலைத் தடுக்க அமெரிக்கா தனது அதிநவீன SM-3 (Missile Defense Systems) இடைமறிப்பு ஏவுகணையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவின் உயர்தரப் பாதுகாப்பு வளங்களைச் செலவழிக்க வைத்ததிலேயே ஈரான் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், ஒருவேளை அந்த ஏவுகணைகள் தப்பித்திருந்தால், அமெரிக்காவின் நிரூபிக்கப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பையே பழைய ரக ஏவுகணைகளால் சிதைக்க முடியும் என்பதும் நிரூபணமாகியிருக்கும்.
இதையும் படிக்க : துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்.. விமான சேவைகள் முடக்கம்..
அமெரிக்காவின் எதிர்வினை:
இந்தத் தாக்குதல் முயற்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன், ஈரானின் இந்த நடவடிக்கை “ஆபத்தான ஆட்டம்” என்றும், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பாற்பட்டு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் போர் மேகங்களைச் சூழச் செய்துள்ளது. கத்தாரின் எரிவாயு நிலையங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, ஈரானின் இந்த அடுத்தக்கட்ட நகர்வு உலகளாவிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.