ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் அதிரடி கட்டுப்பாடு.. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்?
Strait of hormuz: ஈரானின் இந்த திடீர் நடவடிக்கையால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது. இருப்பினும், அமெரிக்கா - ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை தற்போது சற்றே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக பொருளாதாரத்தின் மிக முக்கியமான கடல் வழித்தடமாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz), கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் நீரிணை மீண்டும் வழக்கம்போல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது சர்வதேச சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போர் நிறுத்தம்.. ட்ரம்ப் சொன்ன ஹேப்பி நியூஸ்.. சரசரவென விலை குறைந்த கச்சா எண்ணெய்!
கப்பல்கள் எண்ணிக்கையில் கட்டுப்பாடு:
ரஷ்யாவின் ‘டாஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதிக்கும். போருக்கு முன்பு இந்த வழியாக தினமும் சுமார் 140 கப்பல்கள் வரை பயணம் செய்தன. தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த வரம்பு, போக்குவரத்தில் கிட்டத்தட்ட 90% சரிவை ஏற்படுத்தும். போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த இயல்பு நிலைக்கு இனி திரும்ப முடியாது என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரானின் முன் அனுமதி கட்டாயம்:
இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் அனைத்துக் கப்பல்களும் ஈரானின் இஸ்லாமிய குடியரசிடம் இருந்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். குறிப்பாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இந்த கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட இந்த 2 வார கால தற்காலிக ஒப்பந்தத்தின்படி, ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தினால், ஈரான் தனது “தற்காப்புத் தாக்குதல்களை” நிறுத்திவிட்டு ஹார்முஸ் நீரிணையை திறக்க ஒப்புக்கொண்டது.
இஸ்ரேல் – லெபனான் விவகாரம்:
இஸ்ரேல் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் தரப்பு கூறுகிறது. ஆனால், இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்துவதை போர்நிறுத்த மீறலாக ஈரான் கருதுகிறது. ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கவும் ஈரான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கட்டணத்தைக் கிரிப்டோகரன்சி அல்லது சீன யுவான் மூலம் செலுத்த ஈரான் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.
ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள ஹார்முஸ் நீரிணை வெறும் 34 கி.மீ அகலம் மட்டுமே கொண்டது. இருப்பினும், உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. எண்ணெய் மட்டுமின்றி, உரங்கள் மற்றும் அத்தியாவசிய விவசாயப் பொருட்களும் இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. வழக்கமாக ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் செல்லும் இந்த பாதையில், தற்போது 15 கப்பல்களாகக் குறைக்கப்பட்டிருப்பது உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியா மீதான தாக்கம்:
ஈரானின் இந்த திடீர் நடவடிக்கையால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது. இருப்பினும், அமெரிக்கா – ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை தற்போது சற்றே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேற்கு ஆசியா போர் நிறுத்தம்: ஈரான் வலியுறுத்திய 10 நிபந்தனைகள்!
இந்தக் குறுகிய கடல் பகுதி உலகின் “பொருளாதார நரம்பு மண்டலமாக” கருதப்படுவதால், ஈரானின் இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் காலங்களில் உலகப் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை சர்வதேச நாடுகள் உற்று நோக்கி வருகின்றன