தமாகாவில் இருந்து விலகினார் யுவராஜா.. அடுத்த கட்ட அரசியல் பயணம் என்ன?
யுவராஜா தமாகாவின் மிக முக்கிய அடையாளமாகத் திகழ்ந்தவர். கன்னியாகுமரி முதல் சென்னை வரை இளைஞர்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பையும், பெரிய இளைஞர் பட்டாளத்தையும் தன் வசம் வைத்திருந்தவர். இதனால், அவர் கட்சியை விட்டு விலகுவது தமாகாவிற்கு ஒரு பலத்த நெருக்கடியாகவும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
சென்னை, ஜுன் 15: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் (தமாகா) முக்கியத் தூண்களில் ஒருவராகக் கருதப்பட்ட அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் யுவராஜா, தமாகாவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பான விலகல் கடிதத்தை தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு அவர் அனுப்பியுள்ளார், அதில் தற்போதைய அரசியல் மற்றும் குடும்பச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அரசியலில் இருந்து விலகும் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக யுவராஜா தெரிவித்துள்ளார். தனது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி இக்கட்சியை நேசித்து இணைந்ததாகவும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மீது வைத்திருந்த மதிப்பு மற்றும் மரியாதையின் காரணமாக இத்தனை காலம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளிலும் கட்சிக்காக உழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ராஜினாமா கடிதத்தை அனுப்பும் முன்பாக, இரண்டு நாட்களுக்கு முன்பே தமாகா தலைவர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து தனது முடிவை அவர் முன்கூட்டியே தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : “சீட்டுக்கட்டு போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது”.. இபிஎஸ் மீது சி.வி. சண்முகம் கடும் பாய்ச்சல்!
கடிதத்தில் குறிப்பிட்ட உருக்கமான விவரங்கள்:
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது உழைப்பையும், நேரத்தையும் அர்ப்பணித்து பயணித்த அரசியல் பொதுவாழ்வில் இருந்து தற்பொழுது விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக யுவராஜா குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்டத்திலிருந்தே எனக்கு ஒரு நல்ல தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஜி.கே.வாசன் அவர்கள் விளங்கினார். இளமைப் பருவம் முதல் என் வாழ்வின் முக்கிய காலகட்டங்களை இணைத்துக் கொண்ட ஒரு கட்சியை விட்டு விலகுவது எளிதான முடிவல்ல, இது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கிறேன். கட்சியிலிருந்து விலகினாலும், ஜி.கே.வாசன் அவர்கள் மீது வைத்துள்ள அன்பும், அவரிடம் கற்றுக்கொண்ட நேர்மையும் என்னை விட்டு என்றும் விலகாது” என்று தனது கடிதத்தில் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
யுவராஜாவின் அரசியல் பின்னணி:
ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, ராகுல் காந்தி நடத்திய இளைஞரணித் தேர்தலில் போட்டியிட்டு தமிழக இளைஞரணித் தலைவராக யுவராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜி.கே.வாசன் தமாகா கட்சியைத் தொடங்கியபோது அவருடன் பயணித்த யுவராஜா, அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவராகவும், பின்னர் மாநிலப் பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். கடந்த காலங்களில் இரண்டு முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.
தமாகாவிற்குப் பின்னடைவா?
யுவராஜா தமாகாவின் மிக முக்கிய அடையாளமாகத் திகழ்ந்தவர். கன்னியாகுமரி முதல் சென்னை வரை இளைஞர்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பையும், பெரிய இளைஞர் பட்டாளத்தையும் தன் வசம் வைத்திருந்தவர். இதனால், அவர் கட்சியை விட்டு விலகுவது தமாகாவிற்கு ஒரு பலத்த நெருக்கடியாகவும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. எனினும், தன்னுடன் யாரும் வர வேண்டாம், தான் மட்டுமே விலகுவதாகத் தனது ஆதரவாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : அதிமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி.. கட்சியில் இருந்து விலகினார் நடிகை கௌதமி.. இபிஎஸ்-க்கு கடிதம்!!
அடுத்து தமிழக வெற்றிக் கழகமா?
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் பலரும் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில், தமாகாவில் இருந்து விலகியுள்ள யுவராஜா அடுத்த வாரத்தில் தவெக தலைவர் விஜயையோ அல்லது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையோ சந்தித்து, தவெக-வில் இணைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.