ஐ.டி.யில் வேலை கிடைக்காத விரக்தி…உடலில் பாதரசத்தை செலுத்திய இளைஞர்…அடுத்து நடந்த விபரீதம்!
Villupuram Crime; விழுப்புரத்தில் ஐ. டி. நிறுவனத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விழுப்புரம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரத்தில் இளைஞர் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், பூந்தோட்ட பகுதியை சேர்ந்தவர் துளசி ராம் (36 வயது). இவருக்கு மதுரை மாவட்டம், கல்லுப்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், பி.இ. படித்துள்ள துளசிராம் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆனால், சில சூழ்நிலை காரணமாக அந்த நிறுவனத்தில் அவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இதனால், அவர் வேறு நிறுவனங்களில் வேலை தேடி வந்துள்ளார். அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், போதிய வருமானம் இன்றி துளசி ராம் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமம் அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், துளசிராம் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கணவரிடம் கோபித்து சென்ற மனைவி
இதில், ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் துளசிராமிடம் கோபித்துக் கொண்டு பாண்டியம்மாள் தனது குழந்தையுடன் தனது தாய் வீடான கல்லு பட்டிக்கு சென்று விட்டார். இதனால், வேலை இல்லாத விரக்தி மற்றும் மனைவி கோபித்து விட்டு சென்றதன் காரணமாக துளசிராம் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு துளசிராம் கூறி வந்துள்ளார். மேலும், கல்லுப்பட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு நேரடியாக சென்று மனைவி பாண்டியம்மாளிடம் தன்னுடன் வருமாறு கூறியுள்ளார்.
மேலும் படிக்க: அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய 2 குழந்தைகள் பலி.. நீடிக்கும் பரபரப்பு!!
தற்கொலை முடிவை எடுத்த இளைஞர்
ஆனால், அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததுடன் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துளசிராம் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி, அவர் வீட்டுக்கு செல்லும் வழியில் கடையில் பாதரசத்தை வாங்கி விட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு, ஊசி மூலம் பாதரசத்தை தனது உடலில் தானாகவே செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதில், துளசிராம் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.
தீவிர சிகிச்சையில் பிரிந்த உயிர்
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் துளசிராமை மீட்டு உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, துளசிராம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி துளசிராம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: நாளை 3 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் இயங்காது.. டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு..
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)