Hosur: கணவன் – மனைவி வாழ்க்கை.. ஒரே இடத்தில் காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை!
ஓசூர் முக்கண்டபள்ளியில் வசித்து வந்த தினேஷ் மற்றும் பவானி ஆகிய இருவரும் காதல் தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவி என பொய் சொல்லி ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான தகராறு தற்கொலைக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

கிருஷ்ணகிரி, ஜூன் 5: ஓசூரில் கணவன், மனைவி என பொய் சொல்லி ஒன்றாக வாழ்ந்த காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் வெளியூரிலிருந்து வேலை பார்க்க வரும் இளம் வயதினர் காதலித்து அல்லது வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். சில இடங்களில் ஆண், பெண் நண்பர்களும் ஒன்றாக வீடெடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இப்படியான நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். 23 வயதான இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்க்கை
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தை அடுத்த செங்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான பவானி என்ற பெண் ஓசூரில் செயல்படும் மற்றொரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் ஓசூர் முக்கண்டபள்ளி பகுதியில் தங்களை கணவன், மனைவி எனக் கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர். அங்கிருந்து தினமும் பணிக்கு சென்று வருவது, விடுமுறை நாட்களில் வீட்டுக்கு சென்று வருவது போன்ற செயல்களில் இவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
முற்றிய தகராறு – நடந்த விபரீதம்
இப்படியான நிலையில் 2025 ஜூன் 3ஆம் தேதி இரவு நேரத்தில் தினேஷ் மற்றும் பவானி இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் கடும் கோபமடைந்த பவானி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வீட்டை விட்டு சென்ற பவானி மீது தினேஷ் கோபத்தில் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் பவானியில் செல்போனுக்கு அழைத்த தினேஷ் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியாமல் போனது. உடனடியாக தாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு விரைந்து சென்றார். ஆனால் அதற்குள் தினேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பவானி கதறி அழுதுள்ளார். பின்னர் காதலனை பிரிந்த துக்கம் தாங்காமல் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து நடந்து விவரங்களை எல்லாம் தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
ஒரே இடத்தில் தற்கொலை
மேலும் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து தினேஷ் தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் பவானியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பவானியின் நண்பர்கள் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவம் தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் பார்த்தபோது இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து இருவரது உடல்களையும் மீட்ட போலீசார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை எதற்கும் தீர்வல்ல. ஏதேனும் பிரச்னையால் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)