காபி தோட்டத்துக்கு மத்தியில்.. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையில்.. சலிப்பு தட்டாத அழகான சுற்றுலா தலம்!
Yercaud Tourist Spot: தமிழகத்தில் கோடை காலத்தில் சுற்றுலா செல்வதற்கு பல்வேறு இடங்கள் இருந்தாலும், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடமானது தவிர்க்க முடியாத சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. அது என்ன இடம், என்ன ஷ்பெஷல் உள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலம் ஏற்காடு
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சுற்றுலா தலம். இங்கு பசுமையான மலைகள், குளிர்ச்சியான காலநிலை, கண்ணுக்கு எட்டும் வகையில் காபி தோட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியான சீதோஷ்ண காலநிலையே அனுபவித்துக் கொண்டே காபி தோட்டங்களுக்கு மத்தியில் காலாற நடை போட்டுக்கொண்டு ஏற்காட்டின் மொத்த அழகையும் ரசித்து மகிழலாம். அந்தப் பகுதியில் அமைந்துள்ள அழகான ஏற்காடு ஏரியும், அதில், கண்களுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் தண்ணீரானது கடல் போல நிரம்பி இருக்கும். இங்கு பிரபலமாக நடைபெற்று வரும் படகு சவாரியை சுற்றுலா பயணிகள் மேற்கொள்ளாமல் சென்றால் எப்படி. இந்த படகு சவாரியில் இசைக்கு நடனம் போடும் வகையில் ததும்பும் தண்ணீரில் படகு செல்கையில் நாலாபுரமும் சூழ்ந்திருக்கும் இயற்கை அழகை கண் கூறாக கண்டு ரசிக்கலாம்.
சலிப்பு தட்டாத அழகான சுற்றுலா தலம்
அதோடு மட்டுமின்றி அந்தப் பகுதியில் அமைந்திருக்கும் கிளியூர் அருவியும் சுற்றுலா பயணிகளுக்கு சற்றும் சலிப்பு தட்டாமல் சுற்றுலா இன்பத்தை அள்ளி வழங்கும். ஏனென்றால், சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழும் அருவி நீரானது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அப்படியே சற்று நகர்ந்தால் லேடிஸ் சீட் என்று அழைக்கப்படும் ஒரு அமைதியான வியூ பாயிண்ட் அமைந்திருக்கும். அந்த இடத்தில் இருந்து சுற்றி பார்த்தால் சேலம் நகரின் அழகையும், மலைகளின் அழகையும் ரசிக்கலாம். இதே போல, மற்றொரு அமைதியின் சிகரமாக விளங்கும் பகோடா பாயிண்டில் இருந்து சுற்றிப் பார்த்தால் பள்ளத்தாக்கின் திகிலூட்டும் அழகையும் கண்டு ரசிக்கலாம்.
மேலும் படிக்க: நெருங்கி வரும் கோடை விடுமுறை.. ஊட்டி மலை ரயில் குறித்து குளு குளு அறிவிப்பு.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
பசுமையின் மையப்புள்ளி அண்ணா பூங்கா
இந்த திகிலை சற்று போக்குவதற்காகவே அமைந்துள்ளது அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம். ஏற்காடு ஏரியே சுற்றி அமைந்துள்ள இந்த பூங்காவில் ஏராளமான ரோஜா வகைகள் மற்றும் தாவரங்கள் அமைந்துள்ளன. இந்த பூங்காவை சுற்றி பார்க்கும் போது பல்வேறு வண்ணங்களை ஒரு சேர கொண்டுள்ள பட்டாம்பூச்சி பறந்து செல்வதையும், பூக்களில் தேன் குடிப்பதற்காக பறந்து செல்லும் வண்டுகளின் ரிங்கார சத்தமும் நம் காதுகளில் (பாரதி கூறியது போல) தேன் வந்து பாயும். அப்படியே சற்று அதிகமான திகிலை அடைவதற்கு பியர் குகை அமைந்துள்ளது.
கோடை கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடம்
இந்த குகை பாதை வழியாக பயணம் மேற்கொண்டால் சாகச விரும்பிகளுக்கு ஒரு திகிலூட்டும் அனுபவம் கிடைக்கும். மேலும், அங்கு அமைந்துள்ள பிக்கப் பார்க்கானது பல்வேறு வகையான பறவைகள் கொண்ட உயிரியல் பூங்காவாக விளங்கி வருகிறது. இங்குள்ள பறவைகளை காண்கையில் வேறு விதமான ஒரு அனுபவத்தை நமக்கு தரும். சேலத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருமையான இடத்துக்கு சுமார் ஒரு மணி நேர பயணத்தில் சென்றடையலாம். கோடைகால சுற்றுலா பயணத் திட்டத்தில் ஏற்காடையும் ஒரு தேர்வாக வைத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!