மருமகளுடன் தகராறில் ஈடுபட்ட மாமியார்… கத்தியுடன் வந்த உறவினர்.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்!
Vellore Crime: வேலூர் மாவட்டத்தில் மருமகளிடம் தகராறில் ஈடுபட்ட மாமியாரை உறவினர் ஒருவர் கத்தியால வெட்டி படுகொலை செய்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பாலூர் ஆலமர வட்டத்தை சேர்ந்தவர் முனியன். கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது 2-ஆவது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு, அபிமன்யு என்ற மகன் இருந்து வருகிறார். ராஜேஸ்வரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிர் இழந்து விட்டார். இதனால், முனியன் 3- ஆவதாக கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநராக இருந்து வரும் அவரது மகன் அபிமன்யு சென்னையை சேர்ந்த பிரதிபா என்ற பெண்ணை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், பிரதிபாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலூருக்கு அழைத்து வந்துள்ளார். இதற்கு, முனியனின் 3- ஆவது மனைவி கவிதா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மாமியார் – மருமகள் இடையே மீண்டும் தகராறு
இதனால், கவிதாவுக்கும், பிரதீபாவுக்கும், அவரது கணவர் அபிமன்யுவுக்கும் தகராறு இருந்து வந்தது. அவ்வப்போது, பிரதீபா மற்றும் கவிதா இடையே வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை அபிமன்யு நுங்கு வியாபாரத்துக்காக பெங்களூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. வீட்டில், பிரதீபா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, வழக்கம் போல பிரதீபாவிடம், கவிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, எதற்காக இங்கு வந்தீர்கள். வேறு வீட்டுக்கு குடித்தனம் நடத்த செல்ல வேண்டியது தானே.
மேலும் படிக்க: காதலனுக்கு வெறொரு பெண்ணுடன் திருமணம்? மன உளைச்சலில் இளம் பெண் விபரீத முடிவு.. சிக்கியது உருக்கமான கடிதம்!




மாமியாரை தட்டிக் கேட்ட நபர்
நீங்கள் இருப்பது எங்களுக்கு தொந்தரவாக உள்ளது. விரைவில் வேறு வீட்டுக்கு தனி குடித்தனம் சென்று விடுங்கள் என்று கூறி திட்டியதாக தெரிகிறது. இதற்கு, அபிமன்யுவின் மனைவி பிரதீபா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், இருவர் இடையே இருந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி உள்ளனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ராஜேஸ்வரியின் தந்தை சாமுண்டி அவர்களது வீட்டுக்கு சென்று கவிதாவிடம் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதில், சாமுண்டி மற்றும் கவிதா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி உள்ளனர்.
மாமியாரை கத்தியால் வெட்டி கொலை செய்த நபர்
பின்னர், ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சாமுண்டி தன்னிடம் இருந்த கத்தியால் கவிதாவை கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில், கவிதா ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் விமர்சையாக கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை.. தலைவர்கள் வாழ்த்து..