சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்.. 20க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்ததால் அதிர்ச்சி..
பறவைகளின் எச்சங்கள், இறக்கைகள் மற்றும் பிற உடல் பகுதிகள் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் ஆய்வுக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், அண்மையில் வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் இறந்து கிடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் சில இடங்களில் பறவைக் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
சென்னை, மார்ச் 20, 2026: சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில், காலை முதலே 20க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. பறவைக் காய்ச்சல் பரவல் அச்சம் காரணமாக, தற்போது பூங்கா மூடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள இந்த சிறுவர் பூங்கா மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். விடுமுறை காலங்களில் ஏராளமான பொதுமக்கள் இங்கு வருகை தருவார்கள். இங்கு பல்வேறு அரிய வகை பறவைகள் காணப்படுவதால், அவற்றைக் காண மக்கள் அதிகளவில் வருகை தருவது வழக்கம். சமீபத்தில் இந்த பூங்கா மறுசீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலிருந்து இனப்பெருக்கத்திற்காக பல்வேறு பறவைகளும் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பறவைகள் மட்டுமின்றி, முதலை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளும் இந்த பூங்காவில் உள்ளன.
20 பறவைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு:
இந்த நிலையில், பூங்காவில் உள்ள கரண்டிவாயன் நாரை, கூழைக்கடா, செங்கால் நாரை, கொக்கு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பறவைகள் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளன. இவை பறவைக் காய்ச்சலால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சேலத்தில் கோர விபத்து.. கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி 5 பேர் பலி..
பறவைகளின் எச்சங்கள், இறக்கைகள் மற்றும் பிற உடல் பகுதிகள் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் ஆய்வுக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், அதிக வெப்பத்தால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் மாரடைப்பு போன்ற காரணங்களாலும் பறவைகள் இறக்க வாய்ப்புள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு:
மேலும், அண்மையில் வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் இறந்து கிடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் சில இடங்களில் பறவைக் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
மேலும் படிக்க: 11 விரைவு ரயில் சேவையில் மாற்றம்.. தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..
இந்த சூழலில், பூங்காவில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகளின் அடிப்படையில், இது பறவைக் காய்ச்சலா அல்லது அதிக வெப்பத்தால் ஏற்பட்டதா என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
மேலும், பொதுமக்கள் எங்காவது பறவைகள் இறந்து கிடப்பதை கண்டால், அவற்றை வெறும் கைகளால் தொடாமல் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள பிற பறவைகளை பாதுகாக்கும் வகையில், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.