சேலத்தில் கோர விபத்து.. கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி 5 பேர் பலி..
Salem Bus Accident: விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் அடங்குவர்.
சேலம், மார்ச் 20: சேலம் அரியானூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: பழச்சாறு என நினைத்து ஆசிட் குடித்த பெண் பரிதாப பலி.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!
தடுப்புச் சுவரை தாண்டி பாய்ந்த பேருந்து:
View this post on Instagram
சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் அருகே ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை தாண்டி எதிர் திசையில் பாய்ந்தது. தொடர்ந்து, அதிவேகத்தில் சென்ற பேருந்து, எதிர் திசையில் வந்த ஒரு சரக்கு வாகனம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் வாகனங்கள் அனைத்தும் அப்பளம் போல் நொருங்கின.
5 பேர் உயிரிழப்பு:
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் அடங்குவர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணிகள் மற்றும் விசாரணை:
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கொண்டலாம்பட்டி மற்றும் மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்து காரணமாக சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க: செல்பி எடுக்கும்போது 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த இளைஞர்.. 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சேலம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே சாலை விபத்துகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.