தி.நகரில் பரபரப்பு.. 4வது மாடியில் இருந்து பெண் செய்த செயல்.. காப்பாற்றிய போலீஸ்!
Chennai Crime News : சென்னை தியாகராய நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து இளம்பெண் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளம்பெண் பெண் காவல் உதவி ஆய்வாளர் சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றி இருக்கிறார். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, ஜூன் 24 : சென்னை தியாகராய நகரில் 4வது மாடியில் இருந்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, சாதுர்யமாக பெண் உதவி ஆய்வாளர் மீரா காப்பாற்றியுள்ளார். தொலைபேசியில் அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறிக்கொண்டே, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, ஜன்னல் வழியாக குதிக்க இருந்த பெண்ணை அவர் காப்பாற்றியுள்ளார். சென்னையில் தியாகராய நகர் பகுதி எப்போது பரபரப்பாகவே இருக்கும். ரயில் நிலையம், பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு என சுற்றுவட்டாரத்தில் முக்கிய இடங்கள் இருப்பதால் எப்போது தியாகராய நகர் பகுதி பரபரப்பாகவே இருக்கும். தற்போது இந்த பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான பெண். இவர் அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் வசித்து வருகிறார்.
4வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற இளம்பண்
இந்த நிலையில், அவர் 2025 ஜூன் 23ஆம் தேதியான நேற்று ஜன்னல் வழியோக கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர்.
அங்கு பெண் உதவி காவல் ஆய்வாளர் மீரா இளம்பெண்ணின் செல்போனுக்கு அழைத்தார். அவரிடம் உதவி காவல் ஆய்வாளர் மீரா பேசிக் கொண்டிருந்தார். மேலும், தொலைபேசிய மூலம் அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டே, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.




அங்கு கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார். அங்கு அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி, பத்திரமாக அப்பெண்ணை கீழே இறக்கி அழைத்து வந்தார். தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளம்பெண்ணை சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளர் மீராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
காப்பாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளர்
இதற்கிடையில், இளம்பெண் ஜன்னலுக்கு வெளியே நின்று தற்கொலைக்கு முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்ய முயன்றதாக அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து, போலீசார் அவருக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)