“விசிக நினைத்தால் அதிமுக அல்லது தவெகவுடன் கூட்டணி அமைக்க முடியும்”.. திருமாவளவன் பரபர பேச்சு..
திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது என்பது பாஜக செயல்திட்டங்களில் ஒன்று. இங்கேயும் காவிக் கொடியை பறக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தில் பாஜகவால் வாலாட்ட முடிந்தது. அவர்களால் வாலாட்ட முடியாத ஓரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று அவர் கூறினார்.

திருமாவளவன்
விழுப்புரம், பிப்ரவரி 21: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் விசிக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி பங்கேற்று பேசியதாவது: அதிமுக மற்றும் விஜய் தொடங்கிய தவெகவுடன் கூட்டணி அமைக்க அழைப்பு வந்தது. இதனை பொருட்படுத்தாமல் திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்வோம் என கூறினேன். இதற்கு நான் உள்வாங்கி இருக்கிற அம்பேத்கர் அரசியல் மற்றும் மார்க்சிஸியம் தான் காரணம். பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற வலதுசாரிகள் வலுப் பெற்று விடக்கூடாது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க: திருச்சியில் நடக்கும் நாம் தமிழர் கட்சி மாநாடு.. 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்
வாலாட்ட முடியாத ஓரே மாநிலம்:
மேலும் பேசிய அவர், திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது என்பது பாஜக செயல்திட்டங்களில் ஒன்று. இங்கேயும் காவிக் கொடியை பறக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தில் பாஜகவால் வாலாட்ட முடிந்தது. அவர்களால் வாலாட்ட முடியாத ஓரே மாநிலம் தமிழ்நாடு தான். சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்பதுதான் அம்பேக்தர், பெரியாரின் நோக்கம்.
முதல்வர் ஸ்டாலினின் ராஜதந்திரம்:
நான் பல்கலைக்கழகம் உருவாக்கவில்லை, இளைஞர்களை உருவாக்கியுள்ளேன். 5 அல்லது 6 சீட்டுக்கு திமுகவுடன் இருக்கீங்க என்று நம்மை ஆத்தரமூட்டுவார்கள். இதற்கு எல்லாம் திருமாவளவன் அசைந்து கொடுக்கவில்லை. நாங்கள் கொள்கை கூட்டணியில் இருக்கிறோம். அதிமுக மூலம் பாஜக தமிழகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக ஊடுருவி காவி கொடியை ஏற்ற பார்க்கிறார்கள். மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறான், மதமாற்றம் செய்கிறான், இந்துக்களுக்கு விரோதிகள் என்று பாஜக எங்களை வைத்து அரசியல் செய்கிறது.
அம்பேத்கரின் சிந்தனைகளை பாதுகாப்பது மட்டும்தான் எங்கள் நோக்கம். தமிழ்நாடு காப்பாற்றப்பட்டால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும். தேமுதிக எடுத்துள்ள முடிவு என்பது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு விழுந்திருக்கும் இடி. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது முதல்வர் ஸ்டாலினின் ராஜதந்திரம். தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க: “விஜய் கை காட்டுபவரே வேட்பாளர்”.. சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தவெக எச்சரிக்கை!!
விஜய்யுடன் எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை:
இந்தியாவிலேயே கட்டுக்கோப்பாக ஒரு கூட்டணி இருக்கிறது என்றால் அது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. ஏற்கெனவே இருந்த கட்சிகள், அதிமுக கூட்டணியில் சேர்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. விஜயை தேடிச்சென்று ஒரு கட்சி கூட சேரவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.