கோட்டையில் ‘புதிதாக’ நடக்கும் மாற்றங்கள்.. கமிஷன், கட்டிங் சிஸ்டமிற்கு முற்றுப்புள்ளி.. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!
முந்தைய ஆட்சிக் காலங்களைப் போல இந்த ஆட்சியில் பழைய சிஸ்டம், பர்சன்டேஜ் அல்லது கட்டிங் போன்ற முறைகேடுகள் எதுவும் கிடையாது என்று அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பழைய எம்எல்ஏக்கள் போலத் தவெக மக்கள் பிரதிநிதிகள் முறைகேடுகளில் ஈடுபட மாட்டார்கள் என்றார்.
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் நினைத்துப் பார்க்காத வகையில், தவெக ஆட்சியை தடுப்பதற்காக திமுகவும், அதிமுகவும் இணைந்து கூட்டு ஆட்சி அமைக்க 100 விழுக்காடு முயற்சிகளை மேற்கொண்டதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தவெக அரசு அமைவதைத் தடுப்பதற்காகக் கடந்த ஒரு வார காலமாகப் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி அரங்கேறியதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடே வியக்கும் வகையில் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் கைகோர்த்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டு ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: தவெக அரசு அமைந்து 7 நாட்கள்.. ஒதுக்கப்படாத இலாகாக்கள்.. கோட்டையில் தேங்கும் முக்கிய கோப்புகள்!!
இருப்பினும், தவெக தலைவர் ஜோசப் விஜய் இந்த இரு கட்சிகளின் ரகசியக் கூட்டு சூழ்ச்சியையும் முற்றிலும் முறியடித்தார். அதன் மூலமாக, தமிழக மக்கள் தவெக மீது நம்பிக்கை வைத்து என்ன நினைத்து வாக்களித்தார்களோ, அந்த மக்கள் தீர்ப்பை அவர் முழுமையாக நிறைவேற்றிக் காட்டியுள்ளார் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
சுறுசுறுப்பாக இயங்கும் முதலமைச்சர்:
புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தலைமைச் செயலகத்தின் நடைமுறைகளே முற்றிலும் புதிதாக மாறியுள்ளதாக அமைச்சர் விவரித்துள்ளார். ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடிக்காமல் உழைக்கும் முதலமைச்சர், ஒவ்வொரு நாளும் அந்தந்தத் துறை சார்ந்த அதிகாரிகளை நேரில் அழைத்துத் தொடர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். எந்தெந்தத் துறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும், எந்தெந்த அதிகாரிகளை எங்கு நியமித்தால் நிர்வாகம் சரியாக இருக்கும் என்பதை அவரே நேரடியாகக் கவனித்துத் திறம்படச் செயல்பட்டு வருகிறார்.
தொடரும் மக்கள் நலத்திட்டங்கள்:
முதலமைச்சரின் இந்த முழு மூச்சான உழைப்பின் காரணமாக, மக்களுக்குச் சேர வேண்டிய திட்டங்கள் எவ்விதத் தடையும் இன்றிச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. மகளிர் உரிமைத் தொகையான 1,000 ரூபாயாக இருக்கட்டும் அல்லது மாணவர்களுக்குப் போக வேண்டிய கல்வி உதவி நிதியாக இருக்கட்டும், அனைத்தும் உரிய நேரத்திற்குத் துல்லியமாக மக்களைச் சென்றடைகின்றன. வேறு எந்த அரசாக இருந்தாலும் இந்த அளவுக்குத் தடையில்லாத வேகம் சாத்தியப்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார்.
அதிரடியாக மூடப்படும் டாஸ்மாக் கடைகள்:
தவெக அரசு பொறுப்பேற்ற முதல் நாளே முதலமைச்சரின் கவனம் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடைகள் மீதே இருந்தது. தேர்தல் களத்தில் தவெக கொடுத்த வாக்குறுதியின்படி, தேவையற்ற இடங்களில் இருக்கும் மதுக்கடைகள் அனைத்தும் படிப்படியாக மூடப்படும். அதன் தொடக்கமாக, திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக நிர்வாகிகள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தேவையற்ற டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்குத் தேவையில்லாத எந்தவொரு மதுக்கடையோ அல்லது திட்டமோ இந்த ஆட்சியில் இருக்காது என்று அமைச்சர் உறுதியளித்தார்.
இதையும் படிக்க: 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட முடிவு.. இபிஎஸ் தீவிர ஆலோசனை!!
கட்டிங் இல்லாத 100% நேர்மையான ஆட்சி:
முந்தைய ஆட்சிக் காலங்களைப் போல இந்த ஆட்சியில் பழைய சிஸ்டம், பர்சன்டேஜ் அல்லது கட்டிங் போன்ற முறைகேடுகள் எதுவும் கிடையாது என்று அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பழைய எம்எல்ஏக்கள் போலத் தவெக மக்கள் பிரதிநிதிகள் முறைகேடுகளில் ஈடுபட மாட்டார்கள். தமிழக மக்கள் என்ன மாதிரியான ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து தவெக-விற்கு வாக்களித்தார்களோ, அதற்கு இணங்க முற்றிலும் லஞ்ச லாவண்யமற்ற 100 விழுக்காடு நேர்மையான அரசாகவே இந்த தவெக அரசு நீடிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று கூறி அமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார்.