இபிஎஸ், அண்ணாமலை குறித்து பேச்சு.. வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!
TVK Aadhav Arjuna : தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அதிமுக மற்றும் பாஜக குறித்து பேசிய வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதற்கு ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை, ஜூன் 01 : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையை, தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆதவ் ஆர்ஜுனா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்
வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா
என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.
அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு” என குறிப்பிட்டு இருந்தார்.
என்ன மேட்டர்?
அனைவருக்கும் வணக்கம்,
எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன்…
— Aadhav Arjuna (@AadhavArjuna) June 1, 2025
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கல்வி விருது விழா நடைபெற்றது. முன்னதாக, தனியார் விடுதியில் கட்சி பொதுச் செயலளார் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும் என்றும், எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை என ஆதவ் அர்ஜுனா பேசினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதிமுக கூட்டணிக்குள் தமிழக வெற்றிக் கழகத்தை இணைக்க எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக தெரிகிறது. இப்படியான சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஒருமையில் பேசியது பேசும் பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.