தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. தூத்துக்குடியில் பதிவான 15 செ.மீ மழை..
Tamil Nadu Rain Alert: வரவிருக்கும் அக்டோபர் 19, 2025 அன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில், கேரளா மற்றும் கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அருகில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம், அக்டோபர் 16, 2026: அக்டோபர் 16, 2025 தேதியான இன்று தென்மேற்கு பருவமழை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து விலகிய நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், கேரளா, மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயல்சீமா, கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளில் இன்று துவங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாகவும், பல இடங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:
கடலோரத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் கீழடுக்கு வளிமண்டலச் சுழற்சி நிலவுவதாகவும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இலட்சத்தீவு பகுதிகளில் மேலடுக்கு வளிமண்டலச் சுழற்சி நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரவிருக்கும் அக்டோபர் 19, 2025 அன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில், கேரளா மற்றும் கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அருகில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கிட்னிகள் ஜாக்கிரதை.. சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்..
6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:
இதன் காரணமாக அக்டோபர் 16, 2025 தேதியான இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அக்டோபர் 17, 2025 நாளை விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை (மிக கனமழை பெய்ய வாய்ப்பு) விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நெருங்கும் தீபாவளி பண்டிகை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முழு விவரம்..
தொடரும் கனமழை:
அக்டோபர் 19 மற்றும் 20, 2025 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் அக்டோபர் 21, 2025 அன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கனமழையின் காரணமாக வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக குறைந்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.