திருச்சி வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் – ரெயில்வே அறிவிப்பு
Madurai Railway Line Closure: மதுரை ரயில்வே கோட்டத்தில் ஜூலை 17 முதல் 22, 2025 வரை பொறியியல் பணிகள் காரணமாக பல முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. செங்கோட்டை-மயிலாடுதுறை, கன்னியாகுமரி-ஹவுரா, நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மதுரை, திண்டுக்கல் வழியைத் தவிர்க்கின்றன.

கோப்பு புகைப்படம்
மதுரை ஜூலை 15: மதுரை ரெயில்வே (Madurai Railway) கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணியால் 2025 ஜூலை 17 முதல் 22 வரை பல ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. செங்கோட்டை-மயிலாடுதுறை, கன்னியாகுமரி-ஹவுரா, நெல்லை எக்ஸ்பிரஸ் (Sengottai-Mayiladuthurai, Kanyakumari-Howrah, Nellai Express) உள்ளிட்ட ரெயில்கள் மதுரை, திண்டுக்கல் வழியை தவிர்க்கின்றன. குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ், ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் ரெயில்கள் காரைக்குடி, சிவகங்கை வழியாக திருச்சி செல்லும். சில ரெயில்களின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், மணப்பாறை உள்ளிட்ட பல நிலையங்களில் நிற்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் திட்டமிட்டு பயணிக்க ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.
பொறியியல் பணி- ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
மதுரை ரெயில்வே கோட்டத்தின் கீழ் வரும் சில பகுதிகளில் திட்டமிட்ட பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வருகிற 2025 ஜூலை 17 முதல் 22ஆம் தேதி வரை பல முக்கிய ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்டத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்தார்.
இதன்படி, செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (16848) ரெயில் ஜூலை 18 முதல் 22 வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்த பின், மயிலாடுதுறைக்கு செல்லும். இந்த காலத்தில் இந்த ரெயில் மதுரை, திண்டுக்கல், திருமங்கலம், மணப்பாறை உள்ளிட்ட வழித்தடங்களில் இயங்காது.
அதேபோல், கன்னியாகுமரி-ஹவுரா அதிவிரைவு ரெயில் (12666), ஜூலை 19-ஆம் தேதி, விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக திருச்சி வந்த பின் பயணத்தை தொடரும். இவ்விதம் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வழி தவிர்க்கப்படும்.
நெல்லை எக்ஸ்பிரஸ் (16788), 2025 ஜூலை 17-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கத்ரா நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகருக்குச் சென்று, பின்னர் நெல்லைக்கு செல்லும். இந்த ரெயில் திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை வழியாக செல்லாது.
Also Read: 17 மணிநேரத்திற்கு பிறகு! ஒரு வழி தடத்தில் தொடங்கிய ரயில் சேவை.. பயணிகள் மகிழ்ச்சி!
குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்
குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128), 2025 ஜூலை 17 முதல் 21ஆம் தேதி வரை இரவு 11.15 மணிக்கு குருவாயூரில் இருந்து புறப்பட்டு, விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்கிறது. மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை வழியாக செல்லாது.
மேலும், ஐதராபாத் சிறப்பு ரெயில் (07229) 2025 ஜூலை 18ஆம் தேதி காலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை வழியாக திருச்சி வந்தபின் பயணத்தை தொடரும்.
மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் (16352), 2025 ஜூலை 20ஆம் தேதி காலை 6.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, திருச்சிக்கு மானாமதுரை, சிவகங்கை வழியாக வரும். இவ்விரயில்களும் மதுரை, திண்டுக்கல் வழிகளை தவிர்க்கின்றன.
இத்துடன், கச்சிக்குடா சிறப்பு ரெயில் (07192) 2025 ஜூலை 17ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய காலம் 80 நிமிடங்கள் தாமதமாக பகல் 12 மணியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், சரளப்பள்ளி சிறப்பு ரெயில் (07696) ஜூலை 18ஆம் தேதி காலை 9.10 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரெயில், 9 மணி 50 நிமிடங்கள் தாமதமாக இரவு 9 மணிக்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் இந்த மாற்றங்களை முன்பே தெரிந்து கொண்டு பயண திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு ரெயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது.