நெல்லையில் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.. பாதிரியாருக்கு மரண தண்டனை..
Nellai Pocso Case Judgement: 2022-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நிறைவடைந்தது. இதில் இப்ராஹிம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 20, 2026: நெல்லையில் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் பாதிரியாருக்கு மரண தண்டனை விதித்த போக்சோ நீதிமண்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் நான்கு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், பாதிரியாராக பணியாற்றிய இப்ராஹிம் என்பவருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம். 53 வயதான இவர் மதபோதகராக இருந்து, அப்பகுதியில் ஊழியம் செய்து வந்துள்ளார். மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று மதப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
2022-ல் நடந்த கொடூரம்:
இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஊழியம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட 12, 13 மற்றும் 8 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 4 சிறுமிகளை இப்ராஹிம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, நெல்லை மாவட்ட ஊரக உட்கோட்ட மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டிலேயே “மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி!”.. பேரவையில் வெடித்த சௌமியா அன்புமணி.. அமைச்சர் அளித்த உறுதி!!
வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் உள்ளிட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, பல்வேறு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
பாதிரியாருக்கு மரண தண்டனை:
2022-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நிறைவடைந்தது. இதில் இப்ராஹிம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை விவகாரம்.. பேரவையில் அமைச்சர் வன்னியரசு VS கோவி. செழியன் காரசார விவாதம்!!
மேலும், பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை போக்சோ வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.