வெளிநாட்டு செல்லப்பிராணிகள் வைத்துள்ளீர்களா? 15 நாட்களுக்கும் உரிமம் பெற வேண்டும் – இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும்..
மக்காவ், பஞ்சவர்ணக்கிளி, லீமர் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் மற்றும் விலங்குகளை வைத்துள்ள உரிமையாளர்கள், வியாபாரிகள் உடனடியாக அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து உயிரினங்களை இறக்குமதி செய்ய முதன்மை வன உயிரினக் காப்பாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2, 2026: சென்னையில் வெளிநாட்டு செல்லப்பிராணிகள் மற்றும் வன உயிரினங்களை வளர்த்து வருவோர், அவற்றை முறையாகப் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என வனத்துறை வலியுறுத்தியுள்ளது. பொதுவாக வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது வழக்கம். ஆனால், தற்போதைய நிலையில் மக்கள் மத்தியில் வெளிநாட்டு வன உயிரினங்கள் மற்றும் செல்லப்பிராணிகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால், ‘எக்ஸாட்டிக் ஸ்பீசிஸ்’ எனப்படும் ஓணான் முதல் எலி வரை பல்வேறு வகையான வெளிநாட்டு உயிரினங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன.
தடை செய்யப்பட்ட செல்லப்பிராணிகள் – முறையான உரிமம் வேண்டும்:
சென்னையில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் தடை செய்யப்பட்ட வன உயிரினங்களை விற்பனை செய்வதற்கும், வீடுகளில் வளர்ப்பதற்கும் தடை உள்ளது. அதேவேளையில், அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு வன உயிரினங்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்க்கவும், விற்பனை செய்யவும் முறையான உரிமம் பெற வேண்டும் என மத்திய வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: செய்வினையால் வந்த வினை.. கிருஷ்ணகிரியில் மூதாட்டியை திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய சகோதரிகள்.. போலீசாரிடம் பகீர் வாக்குமூலம்!
உலகின் பல்வேறு நாடுகளில் அழிந்து வரும் நிலையில் உள்ள 621 வகையான வன உயிரினங்களும், அழிவின் விளிம்பில் உள்ள 497 வகையான உயிரினங்களும், பொதுவாக வளர்க்கப்படும் 217 வகையான உயிரினங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வகைகளைச் சேர்ந்த உயிரினங்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்து வளர்ப்போர் மற்றும் விற்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் முறையான எண்ணிக்கை குறித்த விவரங்கள் அரசிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெளிநாட்டு வன உயிரினங்களை வளர்க்க, விற்பனை செய்ய அல்லது இனப்பெருக்கம் செய்ய விரும்புவோர் உரிய முறையில் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
15 நாட்களுக்கு உரிமம் பெற வேண்டும்:
வேளச்சேரி வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், மத்திய வனத்துறையின் 2024-ம் ஆண்டு விதிகளின்படி, வெளிநாட்டு வன உயிரினங்கள் மற்றும் செல்லப்பிராணிகளை விற்பனை செய்வோர், புதிதாக வாங்குவோர் உள்ளிட்டோர் 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, ரூ.1,000 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். உயிரினங்களை இனப்பெருக்கம் செய்தாலோ அல்லது அவை உயிரிழந்தாலோ 7 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் படிக்க: சட்டமன்ற வரலாற்றில் முதல்முறை.. சபாநாயகர் நாற்காலியில் சத்யபாமா.. அவையில் எழுந்த பலத்த கைதட்டல்… பின்னணி என்ன!
இனப்பெருக்கம் – விறபனை மையத்திற்கு ரூ.25,000:
இனப்பெருக்கம் செய்து விற்பனை மையம் நடத்த விரும்புவோர் ரூ.25,000 கட்டணம் செலுத்தி 2 ஆண்டுகளுக்கான உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம். உரிமம் பெறாமல் வெளிநாட்டு உயிரினங்களை வளர்த்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ, வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உயிரினங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மோசடிகளைத் தடுக்கும் வகையில், உயிரினங்களின் கால்களில் பதிவு எண்ணுடன் கூடிய வலையம் பொருத்தப்படும். அனைத்து வகையான உரிமங்களுக்கும் parivesh.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-2220 0335 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகள் மீறினால் நடவடிக்கை பாயும்:
மக்காவ், பஞ்சவர்ணக்கிளி, லீமர் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் மற்றும் விலங்குகளை வைத்துள்ள உரிமையாளர்கள், வியாபாரிகள் உடனடியாக அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து உயிரினங்களை இறக்குமதி செய்ய முதன்மை வன உயிரினக் காப்பாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றும், விதிகளை மீறுவோரிடம் இருந்து உயிரினங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.