‘சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கவும்’ சிவகங்கை இளைஞர் மரணம்… தவெக தலைவர் விஜய் கண்டனம்!
Sivaganga Custodial Death : சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என விஜய் வலியுறுத்தி உள்ளார்.

சிவகங்கை, ஜூலை 01 : சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது (Sivaganga Custody Death) குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (TVK Vijay) கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அஜித்குமார் காவல் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.




தவெக தலைவர் விஜய் கண்டனம்
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்!
அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம்…
— TVK Vijay (@TVKVijayHQ) July 1, 2025
சிவகங்கை இளைஞர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
2025 ஜூன் 28ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் உயிரிழந்துள்ளார். திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, போலீசார் அவரை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அஜித் குமாரின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 40 காயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், 5 பேர் கைதாகி உள்ளனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்றம் காவலும் அளிக்கப்பட்டுள்ளது. அஜித் குமாரின் மரணத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.