மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. த.வெ.க வேட்பாளர்கள் அறிவிப்பு.. யாருக்கு வாய்ப்பு?
வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 10, 2026: வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு இடையே நான்கு முனைப் போட்டி நிலவியது. இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.
காலியான 7 தொகுதிகள்:
ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து அதிமுகவில் கடுமையான உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறி 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டன. அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இரண்டு தொகுதிகளுக்கு அக்.6ஆம் தேதி இடைத்தேர்தல்:
இந்தச் சூழலில், வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரண்டு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை, இந்த இடைத்தேர்தல் ஒரு முக்கியமான பலப்பரீட்சையாக பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைத்து 120 நாட்கள் கடந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துள்ளதா அல்லது தொடர்ந்து நீடிக்கிறதா என்பதை இந்தத் தேர்தல் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், தனது கோட்டையை மீண்டும் தக்க வைத்துக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த திமுகவும், இந்த இரண்டு தொகுதிகளிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் மீண்டும் நான்கு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பில் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மதுராந்தகத்தில் பரந்தாமனுக்கும், தாராபுரத்தில் சுகன்யாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
த.வெ.க வேட்பாளர்கள் அறிவிப்பு:
— TVK Vijay (@TVKVijayHQ) September 10, 2026
தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், சத்யபாமா தாராபுரத்திலும் போட்டியிட உள்ளனர். இவர்கள் மீண்டும் வெற்றி வாய்ப்பை கைப்பற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் வேட்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனிகா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி வின்சென்ட்டின் மகள் வழக்கறிஞர் உமா சங்கரியும் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.