நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. 10 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இன்று (அக்டோபர் 11) கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அக்டோபர் 11 : தமிழகத்தில் 2025 அக்டோபர் 11ஆம் தேதியான இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக் கூடும். இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். 2025 அக்டோபர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை
2025 அக்டோபர் 11ஆம் தேதியான நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். தொடர்ந்து, 2025 அக்டோபர் 12ஆம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read : இனி மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை – தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
2025 அக்டோபர் 13ஆம் தேதி கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 அக்டோபர் 11ஆம் தேதியான இன்று நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read : நெல்லையில் அதிர்ச்சி.. 8 மாணவர்களுக்கு எலிக் காய்ச்சல்.. தீவிர சிகிச்சை!
வடகிழக்கு பருவமழை எப்போது?
2025ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை 2025 அக்டோபர் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதிக்குள் தொடங்கும் என வெதர்மேன் பிரதீன் ஜான் கணித்துள்ளார். மேலும், தென்மேற்கு பருவமழை 2025 அக்டோபர் 16 முதல் 18ஆம் தேதி வரை இந்திய பகுதிகளில் இருந்து விலகும் என்றும் நடப்பாண்டு புயல் உருவாக வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். மேலும், எத்தனை புயல் உருவாகும், எங்கே உருவாகும், தீபாவளி அன்று மழை பெய்யுமா என்பது போன்றை இப்போதே கணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். தாழ்வு மண்டலம், புயல் சின்னம் உருவாகும்போது 20 செ.மீ வரை மழை பொழிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறினார்.