கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் பணி நீக்கம் – டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கையை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம் .
சென்னை, ஜூலை 24 : டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கையை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையின்படி, நுகர்வோரின் புகார் அல்லது அதிகாரிகளின் திடீர் ஆய்வில் எம்ஆர்பிஐ விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் பணி நீக்கம்
முதல் முறையாக விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு மாத கால தற்காலிக பணியிடை நீக்கம், ஒரு மாத சம்பளமின்றி பணிநீக்கம் மற்றும் அபராதம் விதிக்கப்படும். பின்னர் உறுதிமொழி பெற்றுக்கொண்டு, தலைமையக ஒப்புதலுடன் வேறு கடைக்கு பணிமாற்றம் செய்து மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
இரண்டாவது முறையாக விதிமீறல் செய்தால் மூன்று மாத கால தற்காலிக பணியிடை நீக்கம், மூன்று மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது மற்றும் அபராதம் விதிக்கப்படும். பின்னர் மதுபான கிடங்கிற்கு குறைந்தது மூன்று மாதங்கள் பணிமாற்றம் செய்யப்படுவார்கள். மூன்றாவது முறையாக MRP-ஐ மீறி மதுபானம் விற்றது நிரூபிக்கப்பட்டால், உள்விசாரணை நடத்தப்பட்டு குற்றம் உறுதியானால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படும்*என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விதிமீறல் தொடர்பான அனைத்து விவரங்களும் பணியாளர்களின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், மாவட்ட மேலாளர்கள் தனி பதிவேடு பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அபராதம் தொடர்பாகவும் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. MRP-ஐ விட ரூ.1 முதல் ரூ.9 வரை கூடுதலாக வசூலித்தால், ஒவ்வொரு ரூபாய்க்கும் ரூ.1,000 வீதம், அதிகபட்சம் ரூ.9,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதில் 60 சதவீதத்தை விற்பனை செய்த பணியாளரும், 40 சதவீதத்தை அப்போது கடையில் பணியில் இருந்த மேற்பார்வையாளரும் செலுத்த வேண்டும். ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதலாக வசூலித்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.