கோடை விடுமுறைக்குபின் நாளை பள்ளிகள் திறப்பு.. 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Tamil Nadu Schools Reopen: தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று கோடை விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்படுகின்றன. பிளஸ் 1, 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்ததை அடுத்து, மாணவர்களின் பயண வசதிக்காக 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஜூன் 01: தமிழகத்தில் கோடை விடுமுறை (Tamilnadu Summer Holiday End) முடிந்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் (School Reopens Tomorrow) 2025 ஜூன் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. பிளஸ் 1, 2 மற்றும் பத்தாம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் முடிந்து, மாணவர்கள் கோடை விடுமுறையில் இருந்தனர். பள்ளிகள் திறப்பதற்கான வளாக பராமரிப்பு, சுத்தம் மற்றும் நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் பணிகள் முடிந்துவிட்டது. புதிய கல்வியாண்டுக்கான நாள்காட்டி விரைவில் வெளியிடப்படும். மாணவர்கள் பயண வசதிக்காக 3000 சிறப்பு பேருந்துகள் 2025 மே 30, 31 மற்றும் ஜூன் 1-ஆம் தேதி இயக்கப்படுகின்றன. பேருந்து முன்பதிவும், கண்காணிப்பும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறையின் பின்னர், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 2025 ஜூன் 2ஆம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்பட உள்ளன. 2025 ஏப்ரல் 25ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில், பள்ளிகள் செயல்படத் தொடங்க உள்ளன.




பொதுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருந்த மாணவர்கள்
முந்தைய கால அட்டவணைப்படி, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் 2025 மார்ச் 3 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. அதேபோல், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் 2025 ஏப்ரல் 7 முதல் 17ம் தேதி வரை, 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2025 ஏப்ரல் 8 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றன. தேர்வுகள் முடிந்ததும், மாணவ மாணவிகள் கோடை விடுமுறைக்கு அனுப்பப்பட்டனர்.
அனைத்து முன்னேற்பாடுகளும் பள்ளித் தரப்பில் நிறைவு
இப்போது பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வளாக பராமரிப்பு, வகுப்பறை சுத்தம், குடிநீர் வசதி, கழிவறைகள் பராமரிப்பு போன்ற அனைத்து முன்னேற்பாடுகளும் பள்ளித் தரப்பில் முடிக்கப்பட்டு, மாணவர்களை வரவேற்கும் பணிகளும் நடைமுறையில் உள்ளன. பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படும்.
பேருந்து பயண அட்டைகள் குறித்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கப்படும் வரை, கடந்த ஆண்டு பெற்ற பழைய பயண அட்டைகளை மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சீருடை அணிந்து இலவசமாக பயணிக்கலாம்
சீருடை அணிந்து இலவசமாக பயணிக்கலாம்..!#school #reopen #bustravel #schooluniform #tngovt #buspass #govtschools #papercutnews #papercutmedia pic.twitter.com/bFjtRZszae
— Papercut_Media (@media_papercut) May 31, 2025
பள்ளிக்கல்வி நாள்காட்டி விரைவில் வெளியிடப்படும்
இதனிடையே, புதிய கல்வியாண்டுக்கான (2025–2026) பள்ளிக்கல்வி நாள்காட்டி விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நாள்காட்டியில், பள்ளி வேலைநாட்கள், விடுமுறை, தேர்வு தேதிகள், ஆசிரியர் பயிற்சி மற்றும் உயர் கல்வி வழிகாட்டி முகாம்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் இடம்பெறும்.
3000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்கள், சுற்றுலா பகுதிகள் மற்றும் தாத்தா-பாட்டி வீடுகளிலிருந்து பள்ளிக்கு திரும்பும் நிலையில், அவர்களின் பயண வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது. 2025 மே 30 மற்றும் 31, ஜூன் ஒன்றாம் தேதி என 3000 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில் தற்போது வரை 26,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படுக்கை வசதி மற்றும் ஏசி வசதி கொண்ட பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. முன்பதிவின் அடிப்படையில் கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் இந்த சேவையை கண்காணிக்க அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில், பள்ளிகள் திறப்பை முன்னிட்டு அனைத்து துறைகளும் தங்களது பணிகளை முடித்த நிலையில் உள்ளன. மாணவர்கள் புதிய கல்வியாண்டை உற்சாகமாக தொடங்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.