பிப்.17ல் தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
TN interim budget on Feb 17th: இடைக்கால நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. துறை வாரியான கோரிக்கைகள், அதற்கான ஒதுக்கீடுகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் பிப்ரவரி 17ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை, பிப்ரவரி 07: தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் பிப்.17ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 20ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற்றது. மீண்டும் கூட்டம் தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக, ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரியில் முடிந்ததும், பிப்ரவரியில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.
இதையும் படிக்க : விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதமீறலும் இல்லை.. ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு:
பெரும்பாலும், தேர்தலை கருத்தில் கொண்டே இடைக்கால பட்ஜெட்டை அரசுகள் தாக்கல் செய்யும். அந்த வகையில், பிப்ரவரி 2-வது வாரத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய அறிவிப்புகள், ஏற்கெனவே உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவற்றை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் அவசியம்.
பிப்.5ல் நடந்த அமைச்சரவைக் கூட்டம்:
இதற்காக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கடந்த பிப்.5-ம் தேதி நடைபெற்றது. இதில், பட்ஜெட் தாக்கலுக்கான நாள், இடம்பெற வேண்டிய முக்கியமான புதிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. இதுதவிர, தொழில் முதலீடுகள் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு காலகட்டங்களில் செய்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவுகின்றன. அந்த நிறுவனங்களுக்கான சலுகைகளுக்கும் அமைச்சரவைதான் ஒப்புதல் அளிக்கிறது. அந்த வகையில், பல்வேறு நிறுவனங்களுக்கான ஒப்புதலும் அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
பிப்.17ல் இடைக்கால பட்ஜெட்:
இதனிடையே, இடைக்கால நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. துறை வாரியான கோரிக்கைகள், அதற்கான ஒதுக்கீடுகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் பிப்ரவரி 17ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அரசியல் கட்சி தலைவருக்கான பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி…என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா!
அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு:
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பிப்.17ல் சட்டப்பேரவை கூடும் அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். 2026-27க்கான முன்பண மானியக் கோரிக்கை, கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை பிப்.20ல் வாசிக்கப்படும் என்றார். அதோடு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.