சரிவை நோக்கி தமிழ்நாட்டின் GST வருவாய்.. ரூ.140 கோடி குறைந்து பின்னடைவு.. என்ன செய்யப்போகிறது அரசு?
Tamil Nadu GST revenue decline: தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டை விட ரூ.140 கோடி (1%) சரிந்து ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது.உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்கள் ஜிஎஸ்டி வசூலில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் இந்த பின்னடைவு பெரும் அதிர்ச்சியையும் நிதி நிர்வாகம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
சென்னை, செப்.03: இந்திய அளவில் ஆகஸ்ட் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் தொடர்பான புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைச் சந்தித்து வரும் சூழலில், தொழில் மற்றும் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டின் வரி வருவாய் மட்டும் சரிவை நோக்கிச் சென்றிருப்பது பொருளாதார வட்டாரத்தில் பெரும் கவலையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் வரி நிர்வாகத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து இத்தரவுகள் பல முக்கியக் கேள்விகளை முன்வைக்கின்றன.
இதையும் படிக்க: டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதல் வசூல்.. ஒரே நாளில் 67 ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் அதிரடி!
ரூ.140 கோடி அளவுக்கு சரிவு:
வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ரூ.10,329 கோடியாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டின் (2026) ஆகஸ்ட் மாதத்தில் இது ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது.இதன் மூலம் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் 1 சதவீதம், அதாவது சுமார் 140 கோடி ரூபாய் அளவுக்குச் சரிவைக் கண்டுள்ளது.அதே காலகட்டத்தில், அகில இந்திய அளவில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
பின்னடைவை சந்தித்த தமிழ்நாடு:
மேலும், இந்தியாவின் பிற முக்கிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் இந்த பின்னடைவு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. உத்தரப் பிரதேசத்தில் ஜிஎஸ்டி வசூல் 19 சதவீதமும், குஜராத்தில் 15 சதவீதமும் அதிகரித்துள்ளது.அதேபோல் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான தெலுங்கானாவில் 16 சதவீதமும், கர்நாடகாவில் 13 சதவீதமும் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்து வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. பிற மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது, தமிழ்நாடு மட்டும் ஒரு சதவீதம் பின்னடைவைச் சந்தித்திருப்பதைச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது என அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வரிகளை உயர்த்தப் போகிறார்களா?
இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “இது தொடர்ந்தால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை அரசு எப்படி ஈடுகட்டப் போகிறது? அதற்காக மேலும் கடன்களை வாங்கப் போகிறார்களா அல்லது வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சரிவு கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் செல்வதற்கு முன்பாக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: முதலமைச்சர் விஜய் பெயரில் ஏ.ஐ DeepFake வீடியோ.. வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி சைபர் கிரைம்..
நிதி நிர்வாகத்திற்கு முக்கிய எச்சரிக்கை:
GST வரிவருவாயில் தேசிய அளவில் பல மாநிலங்கள் முன்னேறி வரும் நிலையில், தமிழ்நாட்டின் வரிவசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சரிவு, தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை. தேசிய அளவில் GST வருவாய் உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் வரிவசூல் சரிவை… pic.twitter.com/mBf2IKtYAf
— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) September 2, 2026
அதேபோல, முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும் இந்த ஜிஎஸ்டி சரிவு தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை மணி எனக் குறிப்பிட்டுள்ளார். “இந்த வருவாய் சரிவுக்கான உண்மையான காரணம் என்ன? இதைச் சரிசெய்ய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? அடுத்தடுத்த மாதங்களில் வருவாய் வளர்ச்சியை உறுதி செய்ய அரசிடம் உள்ள தெளிவான செயல்திட்டம் என்ன?” எனப் பல்வேறு கேள்விகளை முன்வைத்து, அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.