அன்புக் கரங்கள் திட்டம்… மாதம் ரூ.2,000 பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
Anbu Karangal Scheme : தமிழக முதல்வர் ஸ்டாலின் ’அன்புக் கரங்கள்’ திட்டத்தை 2025 செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதற்காக இன்று முதல் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை, செப்டம்பர் 15 : பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ’அன்புமக் கரங்கள்’ (Anbu Karangal Scheme) திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) 2025 செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம், பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் ரூ.2,000 செலுத்தப்படும். இந்த திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசு பெண்கள், குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதோடு, அனைவருக்கான கல்வி என்ற அடிப்படையில், அது தொடர்பாக சில உதவித் தொகை திட்டங்களையும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது அன்புக் கரங்கள் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதாவது, பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ’அன்புக் கரங்கள்’ திட்டம் 2025 செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று தொடங்கப்பட உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் ’அன்புமக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அங்கு குழந்தைகளுக்கு ரூ.2,000 காசோலையை அவர் வழங்குகிறார்.




Also Read : எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின்!
அன்புக் கரங்கள் திட்டம்
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம்
(1/2) pic.twitter.com/WqBSx5CkRx— TN DIPR (@TNDIPRNEWS) September 14, 2025
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்” திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், “அன்புக்கரங்கள்” திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ/ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : ஓசூரில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..
ரூ.2000 பெறுவது எப்படி?
அன்புக் கரங்கள் திட்டத்திற்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்களிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடமோ விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் குடும்ப அட்டையின் நகல், ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், வயதுச் சான்று, கல்விச் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம், பெற்றோரின் இறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்று, விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு சமர்ப்பிக்க வேண்டும்.