AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோடை விடுமுறை ஸ்பெஷல்.. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!!

Summer Vacation Special Trains Announced: இதனால் வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இடம்பிடிப்பது என்பது மிகப்பெரிய விடுமுறை காலத்தில் சவாலாக மாறுகிறது. முன்பதிவுகள் அனைத்தும் மாதங்களுக்கு முன்பே முடிந்துவிடுவதால், கடைசி நேரத்தில் பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கோடை விடுமுறை ஸ்பெஷல்.. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 30 Apr 2026 08:09 AM IST

கோடை விடுமுறையை முன்னிட்டு எழும்பூர்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் மற்றும் கோடை காலத்தின் தாக்கம் அதிகரிக்கும் வேளையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அளிக்கப்படும் கோடை விடுமுறை என்பது அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு காலமாகும். குறிப்பாக, வாழ்வாதாரத்திற்காகத் தலைநகர் சென்னையில் குடியேறியுள்ள தென் மாவட்ட மக்கள், இந்த விடுமுறை நாட்களைத் தங்கள் சொந்த ஊர்களில் உள்ள உறவினர்களுடன் கழிக்கவும், குலதெய்வக் கோயில்களுக்குச் செல்லவும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதையும் படிக்க: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. மாநிலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மே 4!

பயணிகளின் நெரிசலும் சவால்களும்:

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்கிறது. இதனால் வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இடம்பிடிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக மாறுகிறது. முன்பதிவுகள் அனைத்தும் மாதங்களுக்கு முன்பே முடிந்துவிடுவதால், கடைசி நேரத்தில் பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

தெற்கு ரயில்வேயின் சிறப்பு ஏற்பாடுகள்:

இந்த அதீத பயணத் தேவையைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ரயில்களை (Summer Special Trains) இயக்குகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான கோடை விடுமுறையை முன்னிட்டும் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

எழும்பூர்-கன்னியாகுமரி:

கோடை விடுமுறையை முன்னிட்டு, எழும்பூர்-கன்னியாகுமரி, ஈரோடு-சென்னை சென்ட்ரல், போத்தனூர்-சென்னை சென்ட்ரல், தாம்பரம்-தென்காசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஏப்.30) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06045), நாளை மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வருகிற 3-ந்தேதி இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரயில் (06046), மறுநாள் காலை 11.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

தாம்பரம்-தென்காசி:

ஈரோட்டில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.20 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் (06026), இன்று மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் வரும் சிறப்பு ரயில் (06025), நாளை அதிகாலை 5.15 மணிக்கு போத்தனூர் வந்தடையும்.

போத்தனூரில் இருந்து வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் (06028), அதேநாள் மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் சிறப்பு ரயில் (06027) மறுநாள் காலை 5.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

இதையும் படிக்க: மக்களே கோடை விழாவுக்கு தயாரா.. கண்களை கட்டி இழுக்கும் வண்ண மலர்கள்.. விரைவில் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி!

தாம்பரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தென்காசி செல்லும் சிறப்பு ரயில் (06089), நாளை காலை 10 மணிக்கு தென்காசி சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வருகிற 3-ந்தேதி இரவு 9.30 புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (06090), மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us