“புதிய ரேஷன் கார்டு”.. விரைவில் சிறப்பு முகாம்கள்.. அமைச்சர் வெங்கடரமணன் சொன்ன GOOD NEWS!!
New Ration Cards: தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் வழக்கமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். தற்போது தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ள சூழலில், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை, மே 30: சென்னையில் புதிய குடும்ப அட்டைகள் தேவைப்படும் பகுதிகளில் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும், குடும்ப அட்டை விண்ணப்பங்களுக்கு உடனடித் தீர்வு வழங்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டைப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அமைச்சர் வெங்கடரமணன், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் இணைந்து இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிக்க: “இருமொழிக் கொள்கை என்பதே இந்த மண்ணுக்கானது” அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்!
அரிசி, பருப்பு தரம் குறித்து புகார்:
இந்த ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தண்டையார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து நீண்ட நாட்களாகச் சில முக்கியக் கோரிக்கைகளும் புகார்களும் வந்ததாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, அங்குள்ள நான்கு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றின் அளவு சில நேரங்களில் குறைவாகக் கொடுக்கப்படுவதாகவும், ஒருசில நேரங்களில் பொருட்களின் தரம் திருப்திகரமாக இல்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து சரிசெய்யவே தான் வருகை தந்தததாக அவர் விளக்கினார்.
சுகாதாரமான முறையில் சேமிப்பு:
இந்த ஆய்வின் போது, நியாயவிலைக் கடைகளின் உட்பகுதி மட்டுமின்றி, அக்கடைகளைச் சுற்றியுள்ள பொது இடங்களிலும் சுகாதாரத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எவ்வித அசெளகரியமும் இன்றி வாங்கிச் செல்வதற்கும், கடைகளின் கிடங்குகளில் பொருட்களைச் சுகாதாரமான முறையில் சேமித்து வைத்து விநியோகிப்பதற்கும் ஏதுவாக இந்த சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனப் பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டு விநியோகம்:
தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் வழக்கமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். தற்போது தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ள சூழலில், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: பள்ளி – கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு… சீருடை – ஐடி கார்டு இருந்தாலே பேருந்தில் இலவச பயணம்!
விரைவில் சிறப்பு முகாம்:
தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தற்போது கள ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. ஆட்கள் பற்றாக்குறை இல்லாத இடங்களில் விண்ணப்பங்கள் வந்தவுடன் உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு புதிய கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிய குடும்ப அட்டைகள் பெற விரும்பும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில், அவர்களின் வசதிக்காக விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்களுக்குத் தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.