சாலையில் கிடந்த 20 பவுன் நகை..நேர்மை தவறாமல் தூய்மை பணியாளர் செய்த செயல்..திருவாரூரில் நெகிழ்ச்சி!
Sanitation Worker: திருவாரூரில் சாலையில் தவற விடப்பட்ட 20 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருள்களை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பொன்னாடை அணிவித்து, மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டார். இந்த நகை திருமணத்துக்காக வாங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
திருவாரூர் நகரப் பகுதியில் ஆண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளர் துரை உள்ளிட்டோர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சாலையின் நடுவே ஒரு பை கிடந்தது. அந்த பையை தூய்மை பணியாளர் துரை எடுத்து பார்த்த போது, அதில், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து திருவாரூர் நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துடன் இந்த நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சென்னை கூடுவாஞ்சேரி குப்புசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன், முத்துலட்சுமி தம்பதிக்கு சொந்தமானது, அவர்கள் தவற விட்டதும் தெரியவந்தது. இவர்கள் தனது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருடன் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலிவலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவாரூருக்கு வந்துள்ளனர்.
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த நகை பை
அப்போது, திருவாரூர் நகரில் உள்ள உறவினரின் வீட்டுக்கு ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்று விட்டு, பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, ஆட்டோவின் பின்னால் நகை பையை வைத்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆட்டோவில் இருந்த நகை பை தவறி சாலையில் விழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ராதா கிருஷ்ணனை தொடர்பு கொண்ட போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். அதன் பேரில், காவல் நிலையத்துக்கு வந்த ராதா கிருஷ்ணன் குடும்பத்தினரிடம் நகை பையை போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க: சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு திடீர் தடை…ரசிகர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசில்கள்…கடைகளிலும் விசில் விற்பனைக்கு நோ!
திருமணத்துக்காக வாங்கிய நகை-வெள்ளி பொருள்கள்
அப்போது, எனது மகள் அட்சயா தேவிக்கு திருத்துறைபூண்டியில் அடுத்த மாதம் மார்ச் 8-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்துக்காக சுமார் 20 பவுன் தங்க நகை மற்றும் 750 கிராம் வெள்ளி பொருட்கள் வாங்கியிருந்தேன். அந்த நகை பை தவறுதலாக ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்து விட்டது. இதனால், நாங்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தோம். தற்போது, அந்த நகையை தூய்மை பணியாளர் மீட்டு நேர்மையுடன் எங்களிடம் ஒப்படைத்துள்ளார் என்று உணர்ச்சிவசப்பட்டு ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி தெரிவித்தனர்.
View this post on Instagram
தூய்மை பணியாளருக்கு பாராட்டு-கெளரவிப்பு
இதைத் தொடர்ந்து, சாலையில் கிடந்த தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை உயர்ந்த எண்ணத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் துரைக்கு காவல் ஆய்வாளர் சந்தான மேரி தலைமையிலான போலீசார் மற்றும் நகையை தவறவிட்ட முத்துலட்சுமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நன்றி தெரிவித்ததுடன் பாராட்டினர். மேலும், அவருக்கு புதிய ஆடைகள் வாங்கி கொடுத்து கெளரவப்படுத்தினர்.
மேலும் படிக்க: ஒரே நாளில் 8 ஊராட்சி செயலர்கள் சஸ்பெண்ட்…47 பேர் பணியிட மாற்றம்…கள்ளக்குறிச்சியில் அதிரடி நடவடிக்கை!



